
அட்சய திருதியை நாளில் கோவிலுக்கு சென்று லட்சுமிதேவியை மனம் உருக வழிபட வேண்டும். "தாயே நீ தரும் செல்வத்தில் ஒரு பகுதி நிச்சயம் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவேன். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வேன். நோயாளிகளுக்கு உதவுவேன்" என வேண்டிக்கொள்ளுங்கள். மனதார தானம் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
குபேர லட்சுமி பூஜை:
செல்வத்திற்கு அதிபதி கடவுள் குபேரர் ஆவார். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட, விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி புராணம் கூறுகிறது. இந்த நாளில் குபேரர், லட்சுமி உருவத்துடன் பூஜை நடத்தப்படுகிறது. இவற்றுடன் குபேரரின் அடையாளம் ஆன சுதர்சன குபேரன் எந்திரமும் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
பவானியில் புனித நீராடல்:
அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
சிறப்பு:
அட்சய திருதியை, ரோகினி நட்சத்திர நாளில் வரும் போது பல லட்சம் மடங்கு நற்பலன் தரும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அட்சய திருதியை அமையும் தினம் புதன்கிழமையாக இருந்தால் (ஏப்ரல் 30 2025 புதன் கிழமை) அதுவே கோடி மடங்கு நற்பலன் தரும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
16 கருட சேவை:
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் அட்சய திருதியை தினத்தன்று கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள்.
கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணி வகுத்து பத்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும்.
செல்வம் அளித்த பெருமாள்:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் நவதிருப்பதி கோவில் உள்ளது. இங்கு பெருமாள் சயன கோலத்தில் உள்ளார்.
இந்த பெருமாள்தான் குபேரனுக்கு 'மரக்கால்' என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார்.
இந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்திருப்பார். இவருக்கு 'வைத்தமாநிதி, என்றும் 'செல்வம் அளித்த பெருமாள், என்றும் நாமம் சூட்டப்பட்டுள்ளது. அட்சய திரிதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம் சேரும்.
அட்சய திரிதியை நாளில் என்ன செய்யலாம்?
அட்சய திருதியை அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம் அல்லது பாடப்புத்தகங்கள் வாங்கலாம். புத்தகம் வெளியிடலாம்... புண்ணிய தலங்களுக்கு செல்லலாம். வீடு, மனை, கிணறு, சீர்திருத்தம் செய்யலாம். இடம் மாறிய அதிகாரிகள் பொறுப்பேற்கலாம். குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாம். புதிய ஒப்பந்தங்களை செய்யலாம். நெல், மஞ்சள், கரும்பு /பயிரிடுதல் ஆகியவற்றை செய்யலாம். துர்கா, கௌரி, லட்சுமி சிவபூஜை நடத்தலாம்.