

திருஷ்டி கழிக்கும்போது எலுமிச்சை பழத்தை மிதிப்பது என்பது காலம் காலமாக நம்மிடையே உள்ள ஒரு மரபு. திருஷ்டி கழிக்கும்போது (Bad luck remedy) எலுமிச்சை பழத்தைத் தலையைச் சுற்றி, காலால் மிதித்துத் திருஷ்டி கழிப்பார்கள். இறைவனுக்கு மாலையாகச் சூட்டப்படும், புனிதமாகக் கருதப்படும் எலுமிச்சை பழத்தைக் காலால் மிதிக்கலாமா? இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
கோவில்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்யும்போது, குறிப்பாகக் காளி, முருகன், அம்மன் போன்ற தெய்வங்களைத் தரிசனம் செய்த பிறகு பிரசாதமாக எலுமிச்சை பழத்தைத் தருவார்கள். மற்ற பழங்களைக் காட்டிலும் எலுமிச்சை பழத்திற்குப் பல அற்புத சக்திகள் இருக்கின்றன. எலுமிச்சை பழத்தை என்ன நினைத்து எந்த இடத்தில் வைக்கிறோமோ, அந்த இடத்தின் ஆற்றலை ஈர்த்துக்கொள்ளும் சக்தி அதற்கு உண்டு. எலுமிச்சை பழத்தைத் தெய்வத்திடம் வைக்கும்போது, அங்கிருக்கும் நேர்மறையான ஆற்றலை அது உள்வாங்கிக் கொள்கிறது.
யாரெல்லாம் மிதிக்கக்கூடாது? உடல் நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் திருஷ்டி கழிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை மிதிக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை மென்மையாக இருப்பதால், அந்த எதிர்மறை ஆற்றல் அவர்களைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
திருஷ்டி கழிக்கும் முறை: கண் திருஷ்டி அகல வேண்டும் என்று நினைப்பவர்கள், எலுமிச்சை பழத்தை வலதுபுறம் மூன்று முறை, இடதுபுறம் மூன்று முறை எனத் தலையைச் சுற்றி, காலால் மிதித்துவிட்டால் நம்மிடம் இருக்கும் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. உடல் வலிமையும் மன வலிமையும் அதிகம் கொண்டவர்கள், இறைவனின் மீது அதிக பக்தி கொண்டவர்கள் இதனைச் செய்யலாம்.
சிலர் எலுமிச்சை பழத்தைக் காலால் மிதிக்கத் தயங்குவார்கள். அவர்கள் எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து, சிவப்பு குங்குமம் தடவித் தூக்கிப்போடலாம். இந்தச் செயலைச் செய்த பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.
ஏன் நறுக்கி குங்குமம் தடவுகிறோம்?
சிவப்பு நிறம் என்பது 'பலி' கொடுப்பதற்கு நிகரானதாகக் கருதப்படுகிறது. தீய சக்திகளைத் திருப்திப்படுத்தி நம்மை விட்டு விலகச்செய்ய இது ஒரு குறியீடாக அமைகிறது.
எலுமிச்சை சாறும் குங்குமமும் சேரும்போது ஒருவித வேதிவினை ஏற்பட்டு அந்த இடத்தில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலைப் பெறுகிறது.
சிறப்பு தினங்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதைச் செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும். அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் கோவிலுக்குச் சென்று திருஷ்டி கழிக்கலாம். அம்மன் கோவில்களுக்குச் செல்லும்போது எலுமிச்சை பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்தால், அம்மனின் சக்தி துணையாக நின்று நம்மைக் காக்கும்.
திருஷ்டி கழித்த பழத்தை வீதியில் வீசும்போது மற்றவர்கள் மிதிக்காத இடத்தில் போடுவது நல்லது. அழுகிய அல்லது காய்ந்த எலுமிச்சை பழத்தை வழிபாட்டிற்குப் பயன்படுத்தக் கூடாது. நீர்நிலைகளில் போடுவது மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும்.