

ஹரிஹரர், புக்கராயன் எனும் இரு மன்னர்களை உருவாக்கி, விஜயநகரப் பேரரசை நிறுவிய வித்யாரண்யர் சிறந்த அத்வைத துறவி. சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது பீடாதிபதியாக இருந்தவர். இவரது துவக்க காலம் வறுமையில் கழிந்ததால் மகாலட்சுமி குறித்து தவம் செய்தார்.
''உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று மகாலட்சுமி தோன்றி கேட்க, ஐஸ்வரியம் வேண்டும். பணம் காசு வேண்டும்'' என வித்யாரண்யர் கேட்டார். அதற்கு மகாலட்சுமி, உன்னுடைய தவத்திற்கு நிச்சயமாக ஐஸ்வர்யங்களை தருவதற்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் உன்னுடைய பிராப்த கர்மா காரணமாக இந்தப் பிறவியில் நீ இப்படித்தான் வாழ வேண்டும் என விதி இருக்கிறது.
ஆகவே அடுத்த பிறவியில் நீ கேட்ட செல்வத்தை நான் கட்டாயம் தருகிறேன். மிகப்பெரிய செல்வந்தனாய் அடுத்த பிறவியில் பிறப்பாய் என மகாலட்சுமி கூறினார். இந்தப் பிறவியில் கிடைக்காத செல்வம் அடுத்த பிறவியில் கிடைத்து என்ன ஆகப் போகிறது ? எனக்கு இந்தப் பிறவியிலேயே செல்வத்தை அருளவேண்டும் என மீண்டும் வற்புறுத்தி கேட்டதற்கும் மகாலட்சுமி முடியவே முடியாது இந்தப் பிறவியில் நீ ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பது விதி என தீர்க்கமாக கூறினார்.
பண்டிதரான வித்யாரண்யர் மாற்று யுக்தியை கையாண்டார் .ஒருவருக்கு துறவறம் என்பது இரண்டாம் பிறவி இது சாஸ்திரத்தின் கூற்று. ஆதிசங்கரர் கையாண்ட இதே யுக்தியை பண்டிதரும் பின்பற்றி துறவறம் பூண்டார். வித்யாரண்யர் சன்னியாசம் வாங்கிக்கொண்டு மகாலட்சுமியை தியானம் செய்து அழைத்தார்.
மகாலட்சுமி என்ன வேண்டும் என்று கேட்க, பழையபடி ஐஸ்வர்யம் வேண்டும் என சொல்ல இந்த பிறவியில் உனக்கு ஐஸ்வரியம் கொடுக்க முடியாது எனக் கூற அதற்கு நான் இந்த பிறவியை கழித்து சந்நியாசம் வாங்கி புது பிறவி பெற்றுவிட்டேன். எனக்கு இப்பொழுது தாராளமாக ஐஸ்வரியத்தை தரலாம் என விளக்கம் கொடுத்தார்.
உடனே அவரைச் சுற்றி பொன்னும் மணியும் ரத்தினங்களுமாக குவிந்து கிடந்தன. ஆனால் துறவறம் மேற்கொண்டதால் இவரால் அந்த ஐஸ்வர்யத்தை தனக்காக பயன்படுத்த முடியவில்லை . ஏனெனில் துறவி பணத்தை கையால் தொடக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது.
நான் என்னதான் முயன்றாலும் எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அப்படித்தான் நடக்கிறது என்பதை புரிந்துகொண்டார். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. தனக்கு இவ்வளவு செல்வம் கிடைத்ததற்கும் காரணம் உண்டு என்பதால் அந்த செல்வத்தை வைத்து விஜயநகர சாம்ராஜ்யத்தை ஹம்பி என்ற ஊரில் நிறுவியதாக ஒரு வரலாறு உண்டு.
இறைவனிடம் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். கேட்கின்ற அனைத்தையும் இறைவன் கொடுக்காததன் காரணத்தை புரிந்துகொள்ள வேண்டும்.இந்தப் பிறவியில் உனக்கு ஐஸ்வரியம் கொடுத்தாலும், சொந்தத்திற்குப் பயன்படாது என்பது இந்த நிகழ்ச்சியின் மூலமாக வித்தியாரண்யருக்கு மகாலட்சுமி சொல்லவில்லை, நமக்குச் சொல்லுகிறார்.
மாணிக்கவாசகரிடம் இறைவன், என்ன வேண்டும் எனக் கேட்டதற்கு. ''எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைவிட நீதான் நன்றாக அறிவாய். அதனால் எனக்கு என்ன வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதை அருள வேண்டும்'' என்று பதில் சொல்லுகிறார்.''
குழந்தை கேட்டதெல்லாம் தாய் கொடுப்பதில்லை. அதற்காக தாய்க்கு குழந்தையின் மேல் அன்பு இல்லாமல் இல்லை. இதை புரிந்துகொண்டு மாணிக்கவாசகரை போல இறைவனிடம் நாமும் பிரார்த்தித்தால், இல்லை . வேண்டும். என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.