
அனைவர் வீடுகளிலும் தினசரி காலண்டர் ஒன்று இருப்பதைக் காணலாம். தினசரி காலண்டரைக் கிழித்து அன்றைய தினத்தின் பலாபலன்களைப் பார்ப்பது பலரது வழக்கமாக இருக்கும். இதில் பலரும் கவனிக்காத ஒரு விஷயம் அந்த தினசரி நாள்காட்டியில் இடம் பெற்றிருக்கும் அம்புக் குறிகள். அதாவது மேல் நோக்கி, கீழ்நோக்கி அல்லது சமமாக இடம் பெற்றிக்கும் இந்த அம்புக்குறிகள். இவை மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் எனப்படுகின்றன. சரி, இந்த நாட்களின் பலாபலன்கள் என்ன? இந்நாட்களில் செய்ய வேண்டியது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. நட்சத்திரங்கள் மொத்தம் 27. இவற்றை நம் முன்னோர்கள் ராசி மண்டல அடிப்படையில் மூன்றாகப் பிரித்தனர். அவை ஊர்த்துவமுக நட்சத்திரம், அதோமுக நட்சத்திரம், த்ரியமுக நட்சத்திரம் எனப்படுகின்றன.
ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் ஊர்த்துவமுக நட்சத்திரங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களே, ‘மேல்நோக்கு நாட்கள்’ எனப்படும். இந்நாட்களில் மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்கான விதை விதைத்தல், மரங்கள் நடுதல், மேல் நோக்கி எழும் கட்டடங்கள் (வீடு), உயரமான மதில் சுவர் கட்டுதல் போன்றவற்றை ஆரம்பிக்க உகந்த நாட்கள் ஆகும்.
இரண்டாவதாக, பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் அதோமுக நட்சத்திரங்கள் எனப்படும். அதாவது, இவை ‘கீழ்நோக்கு நாள்’ எனப்படுகின்றன. இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகள், பூமிக்கடியில் வளரும் கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் போன்ற பணிகளைச் செய்வது நல்லது.
மூன்றாவதாக, அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் த்ரியமுக நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கொண்ட நாட்கள் ‘சமநோக்கு நாட்கள்’ எனப்படும். இந்த நாட்களில் கார், பைக் போன்ற வாகனங்கள் வாங்குதல், செல்லப்பிராணிகள், ஆடு, மாடு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசற்கால் வைத்தல், வயல் (ஏறு) உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.
நமது முன்னோர் பல விஷயங்களை மிகவும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனுபவப்பூர்வமான வாழ்க்கை முறையை விளக்கி வைத்துள்ளனர்.