
மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனான காஞ்சி மன்னன், திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நிலையில் திருமாலின் விக்கிரகம் ஒன்றை செய்து அதற்கு நாள்தோறும் பலவித அலங்காரங்களை செய்து சுவைமிக்க படையல்களைப் படைத்தான். தனது சிறந்த வழிபாட்டிற்கு இணையாக இந்த உலகிலேயே எவராலும் செய்ய முடியாது என்ற ஆணவம் அவன் மனதில் இருந்தது.
ஒரு நாள் அரசன் உலா வரும்போது வழியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கண்களில் நீர் வழிய துளசி மாலை அணிந்த ஒரு சிறு விக்கிரகத்திற்கு துளசி தளங்களை அர்ச்சித்தபடி இருந்தவரைக் கண்டதும் அரசன் அவரை அழைத்து, “இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ? அரண்மனை வந்து பார். மகாவிஷ்ணுவை எவ்வளவு அழகாக நான் அலங்கரித்து இருக்கிறேன். அழகிய ஆடைகளால் அலங்கரிப்பதை விட்டு வெறும் துளசி மாலை மட்டும் சாத்தி என் கண்ணனை அலங்கோலப்படுத்தி விட்டாயே" என்றான்.
இந்த வார்த்தைகளால் அந்த எளிய பக்தன் மனதை உடைத்து விட்டான். பக்தி செலுத்துவதே முக்கியம் எனக் கருதிய அந்த விஷ்ணுதாசர், "அரசே… பகவானை பூஜிப்பதற்கு இதயத்தில் நிரம்பி வழியும் உண்மையான பக்தி என்ற மலரை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. பொன்னும் அணியும் கொண்டு இறைவனை அளந்து விட முடியாது" என்று சொல்லி தனது பூஜையைத் தொடர, சினம் கொண்ட அரசன், "அந்தணனே, உனது பக்தி மகிமையை பார்த்து விடுகிறேன். நான் முதலில் பகவானை பார்க்கிறேனா அல்லது நீ முதலில் பார்க்கிறாயா என்பதைப் பார்த்து விடலாம்" என்று சூலுரைத்தான்.
அந்தணர் எந்த வார்த்தையையும் பொருட்படுத்தவில்லை. ஆத்திரத்துடன் அரசன் ஒரு மகரிஷியை வரவழைத்தார். மிகுந்த பொருட்செலவில் விஷ்ணு யாகத்தைத் துவங்கினான். நகரமே ஜொலிக்க மக்கள் கூடி அரசனின் சிறப்புமிக்க பக்தியை பாராட்டினர்.
அரசனின் சவாலை ஏற்ற விஷ்ணுதாசரும், ‘க்ஷேத்ர சந்நியாசம்’ என்று ஒரு வகை துறவை மேற்கொண்டு ஆனந்த சயன தீர்த்தத்திலேயே தங்கி மகாவிஷ்ணுவை ஆராதித்தார். பகவானின் தரிசனம் கிடைக்காமல் காஞ்சி திரும்பக் கூடாது என்றும் தரிசனம் காணும் வரை பகலில் ஒரு முறை தனது கையால் உணவு தயாரித்தும் பகவானுக்குப் படைத்த பிறகு உண்டும் வந்தார்.
ஒரு நாள் வழக்கம் போல் உணவு தயாரித்தார். அதை பகவானுக்குப் படைப்பதற்காக எடுத்துச் செல்ல வந்தபோது தயாரிக்கப்பட்ட உணவை காணவில்லை. இதுபோலவே, தொடர்ந்து திருட்டு போயிற்று. மறுமுறை உணவு தயாரிப்பதற்கு நேரத்தை செலவிட்டால் பகவானை வழிபடும் நேரம் குறைந்து விடும் என்று கருதி பட்டினியாகவே விஷ்ணு சித்தர் பஜனை செய்யக் கிளம்பி விடுவார்.
ஏழாவது நாள் உணவை எடுப்பவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கத் தீர்மானித்து உணவைத் தயாரித்த பிறகு அதை மூடி வைத்துவிட்டு மறைவிடத்திலிருந்து கவனித்தார். அங்கே வறுமையால் வாடிய ஒல்லியான தோற்றம் கொண்ட கிழிந்த உடை அணிந்த ஒரு சண்டாளன் வந்தான். சுற்றுமுற்றும் பார்த்து யாருமில்லை என்று நினைத்து சமைத்த உணவை அள்ளிக்கொண்டு ஓட தலைப்பட்டான். இந்த காட்சியைக் கண்ட விஷ்ணுதாசர், அவனிடம் இரக்கம் கொண்டு அவன் எடுக்காமல் விட்ட நெய்யை எடுத்துக் கொண்டு அவன் பின்னால் ஓட ஆரம்பித்தார்.
தன்னைத் தொடர்ந்து வரும் விஷ்ணுதாசரைக் கண்டு வேகமாக ஓட முடியாமல் கல் தடுக்கி கீழே விழுந்து மயக்கமடைந்தான் சண்டாளன். உடனே ஓடோடி வந்து அவன் அருகே அமர்ந்து மேல் துண்டை எடுத்து விசிறி அவனை ஆசுவாசப்படுத்தினார். அவ்வளவுதான். "அப்பனே உனக்கான தேர்வு முடிந்து விட்டது. நீ வெற்றி பெற்று விட்டாய்" என்று கூறியபடி சண்டாளன் இருந்த இடத்தில் சங்கு சக்கரத்துடன் திருமால் புன்னகையுடன் விஷ்ணுதாசருக்குக் காட்சியளித்தார்.
திருமாலின் தரிசனம் கிடைத்த விஷ்ணுதாசர், ஆச்சரியத்தில் உறைந்த நிலையில் மகாவிஷ்ணுவை வணங்கவும் மறந்தார். பகவான் விஷ்ணுதாசருக்கு தரிசனத்தை அளித்ததோடு, விமானத்தில் ஏற்றி வைகுண்டத்துக்கும் அனுப்பி வைத்தார்.
இங்கே விஷ்ணு யாகம் நடத்திக் கொண்டிருந்த அரசன் திடீரென்று மகரிஷியிடம், "நிறுத்துங்கள் யாகத்தை" என உத்தரவிட்டான். காரணம், அவன் கண்களில் விஷ்ணுதாசர் வைகுண்டம் செல்லும் விமானம் பட்டதுதான். விஷ்ணுதாசர் ஜெயித்து விட்டதை அறிந்த அரசன், "பகட்டை விட எளிய பக்திதான் பகவானை அடைய சிறந்த வழி" என்பதை உணர்ந்து கண்ணீர் விட்டு யாக குண்டத்தில் குதித்தான். உடனே பகவான் மகாவிஷ்ணு அரசருக்கும் காட்சி அளித்து வைகுண்டம் அழைத்துச் சென்றார்.