
ஒரு சமயம் புத்தர் மகதத்தில் உள்ள ஏகனாலா கிராமத்தில் இருந்தார். மழை பெய்து, நடவு நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அதிகாலையில் புத்தர் வயலுக்குச் சென்றார். அங்கு விவசாயி காசிபரத்வஜர் கலப்பைகள் கொண்டு உழுது கொண்டு இருந்தார். புத்தர் வந்தபோது, அந்த செல்வந்தர் விவசாயி தொழிலாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் நேரம் வந்தது. புத்தர் அங்கு தனக்கு தானம் வேண்டிக் காத்திருந்தார். ஆனால், அவரைப் பார்த்ததும் காசிபரத்வஜர் ஏளனமாக, "நான் உழுது விதைக்கிறேன். உழுது விதைத்த பிறகு, நான் சாப்பிடுகிறேன். ஓ… துறவி, நீங்களும் உழுது விதைக்க வேண்டும். உழுது விதைத்த பிறகு நீங்கள் சாப்பிட வேண்டும்” என்றார்.
அதைக் கேட்ட புத்தர், "ஐயா, நானும் உழுது விதைக்கிறேன். உழுது விதைத்த பிறகு நான் சாப்பிடுகிறேன்" என்று பதிலளித்தார். குழப்பமடைந்த காசிபரத்வஜர், "நீ உழுது விதைப்பதாகச் சொல்கிறாய். ஆனால், நீ உழுவதை நான் பார்க்கவில்லையே" என்றார்.
அதற்கு புத்தர் பதிலளித்தார், "நான் மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைகளாக விதைக்கிறேன். எனது ஒழுக்கம் மழை, எனது ஞானம் நுகத்தடி மற்றும் கலப்பை, என் அடக்கம் கலப்பையின் தலை, மனம் கயிறு, மனப்பான்மை என்பது கலப்பை மற்றும் கோலை. நான் செயல்கள், வார்த்தைகள் மற்றும் உணவில் கட்டுப்படுத்தப்பட்டவன். நான் உண்மையுடன் எனது களைகளை அகற்றுகிறேன். எனக்குக் கிடைக்கும் பேரின்பம் துன்பத்திலிருந்து விடுபடுவது. நான் நிர்வாணத்தை அடையும் வரை விடாமுயற்சியுடன் எனது நுகத்தைத் தாங்குகிறேன். இவ்வாறு, நான் எனது உழவைச் செய்து விட்டேன். அது அழியாமையின் பலனைத் தருகிறது. இப்படி உழுவதன் மூலம், ஒருவர் எல்லா துன்பங்களிலிருந்தும் தப்பிக்கிறார்" என்றார்.
இந்த விளக்கத்திற்குப் பிறகு, காசிபரத்வஜர் தனது தவறை உணர்ந்து, புத்தருக்கு உணவளித்தார். ஆனால், புத்தர் தனது போதனைகளுக்கு ஈடாக உணவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, அந்த உணவை மறுத்துவிட்டார்.
புத்தருக்கு பாடம் சொன்ன சீடர்: புத்தர் ஒருமுறை மடம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த புத்த பிக்குகளில் ஒருவரின் மேலாடை கிழிந்திருந்தது. அவர் மேல் பரிதாபப்பட்ட புத்தர், அவருக்கு ஒரு மேலாடையை வாங்கிக் கொடுத்தார். அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார் அந்த புத்த பிக்கு.
சில மாதங்கள் கழித்து, மீண்டும் புத்தர் அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அந்த புத்த பிக்குவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு, “முன்பு அணிந்திருந்த மேலாடையை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த புத்த பிக்கு, “அது எனது மெத்தைக்கு தற்போது விரிப்பாக இருக்கிறது. அதற்கு முன்பிருந்த மெத்தை விரிப்பு எனது தலையணைக்கு உறையாக இருக்கிறது. அதற்கு முன்பிருந்தது தலையணை உறையாக உள்ளது. அதற்கு முன்பிருந்தது
எனது வீட்டு வாசல் மிதியாக இருக்கிறது. அதற்கு முன்பிருந்தது என் வீட்டு விளக்குக்குத் திரியாக இருக்கிறது” என்றார். அந்த புத்த பிக்குவின் பதில்களைக் கேட்டு வியந்துபோனார் புத்தர்.