
சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரருக்கு என்று ஒரு தனி சன்னதி இருக்கும். அந்த சன்னதியில் பக்தர்கள் கைத்தட்டி வேண்டுவதை கவனித்திருப்போம். ஆனால், இதுப்போல சண்டிகேஸ்வரர் முன்பு கைத்தட்டினால் பாவம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
புராணக்கதையின்படி, விசாரசர்மன் என்ற மாடு மேய்க்கும் சிறுவன் இருந்தான். அவனுக்கு சிறுவயது முதலே சிவன் மீதான பக்தி அதிகமாக இருக்கவே மாடு மேய்க்கும் போது மணலால் சிவலிங்கம் செய்து அதை தியானித்து வந்தான். அவன் செய்த சிவலிங்கத்திற்கு பசுக்கள் தானாகவே பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்று பசுக்கள் தன் எஜமானருக்காகவும் பாலை சுரக்க செய்தன.
ஒருமுறை விசாரசர்மன் மணலால் சிவலிங்கம் செய்வதையும், அதற்கு மாடுகள் பாலை சுரப்பதையும் அந்த ஊரில் உள்ள இளைஞன் பார்த்துவிட்டு ஊர் முழுவதும் சென்று சொன்னான். இதனால் மாட்டினுடைய உரிமையாளர் விசாரசர்மன் தந்தை எச்சதத்ததினிடம் இதைப்பற்றி சொல்லி அவனைக் கண்டிக்கும்படி கூறினார்.
இதனால் அடுத்த நாள் மாடு மேய்க்க சென்ற விசாரசர்மனை எச்சதத்தன் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான். விசாரசர்மனும் வழக்கம் போல மணல் லிங்கம் செய்து தியானத்தில் ஆழ்ந்துப் போனான். அப்போது பசுக்கள் வழக்கம் போல சிவலிங்கத்திற்கு பாலை சுரந்தன. இதைக்கண்டு கோபம் கொண்ட எச்சதத்தன் மணலால் ஆன சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்தான். இதனால் கோபம் அடைந்த விசாரசர்மன் தன் கையில் இருந்த குச்சியை எச்சதத்தனின் மீது எறிய அது கோடாரியாக மாறி அவனுடைய கால்களை ஆழமாக வெட்டியது.
விசாரசர்மனின் பக்தியை பார்த்து மனம் குளிர்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி எச்சதத்தனின் கால் காயத்தை மறைய செய்தார். அதுமட்டுமில்லாமல் விசாரசர்மனுக்கு சிவகணங்களை நிர்வாகம் செய்யும் பதவியையும் வழங்கினார். அன்று முதல் சிவபெருமானுக்கு வழங்கப்படும் நைவேத்தியம், மாலை சண்டிகேஸ்வரருக்கும் வழங்கப்படும் பழக்கம் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் 63 நாயன்மார்களில் சண்டிகேஸ்வரரும் ஒருவர் ஆவார். எனவே, சண்டிகேஸ்வரர் எப்போதும் தியான நிலையில் அமர்ந்திருப்பார். அவர் முன் கைத்தட்டி அவர் தவத்தை கலைப்பது பாவமாகும். சிவனை வணங்கிவிட்டு வரும் பக்தர்கள் இவரிடம் கைகளை மென்மையாக உதறி காட்டி தான் எந்த சிவ சொத்தையும் எடுத்துச் செல்லவில்லை என்று கைகளைக் காட்ட வேண்டும். இவ்வாறு கைகளை உதறும் பழக்கமே நாளடைவில் கைத்தட்டும் பழக்கமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.