

ஆடி மாதத்தில் அம்மனின் அருள் பரிபூரணமாக விளங்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் அம்பிகை மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் வழிபடும் தமது பக்தர்களின் பிரார்த்தனைகளை செவிமடுத்து, விருப்பங்களை நிறைவேற்றித் தருகிறார். அம்மனுக்கு மிக உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கும் மிக உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நாளை சுக்ல பட்ச துவாதசி தினமாகும். இந்த தினத்தில் மகாவிஷ்ணுவை நினைத்து தூய மனதுடன் விரதம் அனுஷ்டித்தால், நினைத்ததெல்லாம் நிறைவேறும்; தொட்டதெல்லாம் துலங்கும்.
ஏகாதசி என்பது சந்திரனின் சுக்ல பட்சம் (வளர்பிறை) மற்றும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) ஆகிய இரண்டிலும் வரும் பதினோராவது திதி (சந்திர நாள்) ஆகும். ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் உள்ளன, அவற்றில் ஒவ்வொன்றும் தனக்கே உரிய தனித்துவமான முக்கியத்துவத்தையும் ஆன்மீகப் பலன்களையும் கொண்டுள்ளது.
'ஏகாதசி' என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது. அதில் 'ஏக' என்றால் ஒன்று என்றும், 'தச' என்றால் பத்து என்றும் பொருள். இது பதினோராம் நாளைக் குறிக்கிறது. இந்து மதத்தில், விரதம், தியானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இந்த நாள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் ஆடி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி திதி, ‘தேவசயனி ஏகாதசி’ என்று அழைக்கப் படுகிறது. இந்து சமய நம்பிக்கைகளின்படி, இது 'ஆஷாதி ஏகாதசி' அல்லது ‘ஹரிஷயனி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புனித நாளில் தொடங்கி, நான்கு மாதங்கள் நீடிக்கும் 'சாதுர்மாஸ்' காலம் ஆரம்பமாகிறது. இந்த காலகட்டத்தில் பெருமாள் (மகாவிஷ்ணு) யோக நித்திரைக்காக (திருப்பாற்கடலில்) துயில் கொள்வதாக ஐதீகம். மேலும், இந்த நாள் முதல் நான்கு மாதங்களுக்குத் தொடங்கும் விரத காலம் 'சதுர்மாஸ்' என்று அழைக்கப்படுகிறது.
தேவர்கள் தூங்க செல்லும் காலம் என்பதால் இந்த ஏகாதசி விரதத்திற்கு பிறகு வைதீக காரியங்கள் சிறிது நாட்களுக்கு நடத்த மாட்டார்கள். ஹோமத்தில் அளிக்கும் அன்னத்தை உண்பதற்கும் தேவர்கள் வர மாட்டார்கள். ஆஷாட ஏகாதசியன்று மகாராஷ்டி மக்கள், பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபடுகிறார்கள். மற்ற வட மாநில மக்கள் கோதாவரி நதியில் நீராடி காலா ராமர் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த ஏகாதசி விரதத்தை யார் முழுமனதோடு கேட்கிறார்களோ அல்லது படிக்கிறார்களோ அவர்களின் பாவங்கள் அனைத்தும் அழியும் என்பது ஆன்மீக நம்பிக்கை.
‘தேவசயனி ஏகாதசி’ என்பது வெறும் விரத நாள் மட்டுமல்ல. அது உங்கள் வாழ்க்கை முறையை மறுசீரமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த ஏகாதசி தினத்தன்று புளியோதரையும், துவாதசி அன்று தயிர்சாதம் என பிரித்துக்கொண்டு மகாவிஷ்ணுவுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
இந்த ஆண்டிற்கான ஆண்டிற்கான ‘தேவசயனி ஏகாதசி’ நாளை ஜூலை 25-ம்தேதி (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப் படுகிறது. அதாவது ஏகாதசி திதி ஜூலை 24-ம்தேதியான இன்று காலை 09:12 மணிக்கு தொடங்கி, நாளை ஜூலை 25-ம்தேதி காலை 11:34 மணிக்கு நிறைவடைகிறது. விரதத்தை முடிக்கக்கூடிய பரண நேரம் ஜூலை 26-ம்தேதி, காலை 05:39 முதல் 08:22 வரை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். ஏகாதசி விரதம் இருப்பது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, தீய கர்ம வினைகளை நீக்கி, ஒருவரை இறைவனுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது.
மேலும் புலன்களைக் கட்டுப்படுத்தவும், சுய ஒழுக்கத்தை வளர்க்கவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது.
‘தேவசயனி ஏகாதசி’ வழிபாட்டு முறை:
* ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, மகாவிஷ்ணுவிற்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
* அன்று பெருமாளுக்குப் புளியோதரை நைவேத்தியம் செய்வதும், ஏகாதசி மற்றும் துவாதசி தினங்களில் அன்னதானம் செய்வதும் கூடுதல் பலன்களைத் தரும்.
* ஏகாதசி அன்று சூரிய உதயத்தில் விரதத்தைத் தொடங்கி, மறுநாள் (துவாதசி) சூரிய உதயத்திற்குப் பிறகு விரதத்தை முடிக்கவும்.
* ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் தானியங்கள், பயறு வகைகள் மற்றும் வெங்காயம், பூண்டு போன்ற சில காய்கறிகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* அன்றைய தினம் அசைவம், புகை, மது, போதை வஸ்துக்களை உடயோகிக்காதீர்கள்.
* ஏகாதசி நாள் முழுவதும் பிரார்த்தனை, தியானம் மற்றும் விஷ்ணு மந்திரங்களை உச்சரிப்பதில் செலவிடுங்கள். 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும் அல்லது 'ஓம் நமோ நாராயணாய' அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற விஷ்ணு மந்திரங்களை உச்சரிக்கவும்.
ஏகாதசி தொடர்பான கதைகளைப் படியுங்கள் அல்லது கேளுங்கள்.
* பெருமாள் கோவில்களுக்குச் சென்று, விஷ்ணு பகவானுக்குப் பூஜை செய்யுங்கள்.
* இந்நாளில் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, எதிர்மறை எண்ணங்கள், கோபம் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
* ஏகாதசி அன்று உணவு, உடை அல்லது பணத்தை உங்களால் முயன்ற அளவு தானமாக அளியுங்கள்.
* ஏகாதசி (ஜாக்ரன்) இரவில் விழித்திருந்து ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபடுங்கள்.
* துவாதசி அன்று சூரிய உதயத்திற்குப் பிறகு, குறிப்பாகக் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் விரதத்தை (பரணா) முடிக்கவும்.
* நாள் முழுவதும் நேர்மறையான மற்றும் அமைதியான மனநிலையைப் பேணுங்கள்.
- ஏகாதசி அனுசரிப்பதால் விஷ்ணு பகவானின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
மாதந்தோறும் தவறாமல் ஏகாதசி விரதத்தை அனுசரிப்பது, பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைய உதவும் என்று நம்பப்படுகிறது.