

உலக இயலில் ஆழ்ந்திருக்கும் குறை கூறுபவர்களைப் பற்றிக் கவலையே படாதீர்கள். அவர்கள் உங்களை ராஜ பாதையான விவேக-வைராக்யத்தை விட்டுவிட்டு சந்துபொந்துகளில் இழுக்கப்பார்ப்பார்கள். அவதாரங்கள் கூட அவர்கள் மீது பொறாமை கொண்ட சின்னபுத்திக்காரர்களால் குறி வைக்கப்பட்டவர்களே. அப்படி இருக்கும் போது தங்கள் பார்வையை விரிவுபடுத்தி அன்பை உலகமயமாக்க விரும்புபவர்களை அவர்கள் எப்படி விடுவார்கள்?
கிருஷ்ணரைப் பற்றிய அவதூறுப் பேச்சுகளை ஒருபோதும் பாண்டவர்கள் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். அவர்களுக்கு அவரது திவ்யமான புகழ் பற்றித் தெரியும். அவரிடம் முழுமையாக பாண்டவர்கள் சரணடைந்து விட்டார்கள். கிருஷ்ணரும் அவர்கள் செலுத்திய அதே அன்பைத் திருப்பித் தந்தார்.
அவர், தர்மராஜரே தனது தலை, அர்ஜுனனே தனது தோள்கள், பீமனே தனது இடுப்பு, நகுல சகாதேவர்களே தனது கால்கள் என்று பிரகடனம் செய்தார். அவரே இதயம்.
இதுவே பாண்டவர்களுக்கும் கிருஷ்ணருக்குமான உறவுநிலையாகும். இதுவே இறைவனுக்கும் அனைத்து உயிர்களுக்குமான உறவுநிலையாகும்.
பாண்டவர்கள் மட்டுமே இதை உணர்ந்தனர்; நம்பினர்; அதனால் பயனடைந்தனர். மற்றவர்கள் அடையவில்லை.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இறைவனே ஹ்ருதயவாஸி. தனது பணியை முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உலகை நீத்து விட்டதைக் கேள்விப்பட்டவுடன் தர்மராஜர் மஹாப்ரஸ்தானம் செய்ய முடிவெடுத்தார். மௌனமாக வடதிசையை நோக்கித் தனியே சாகும் வரை நடந்து செல்ல அவர் தீர்மானித்தார்.
பீமனிடம் இதைத் தெரிவித்த அவர், பீமன் என்ன முடிவெடுத்திருக்கிறான் என்று கேட்டார்.
பீமன், “அண்ணா! சூதாட்டம் நடந்தபோது நடந்த முடிவை விட்டுவிட்டு வேறொரு முடிவை எடுக்க நாம் வேறு ஆட்களாக ஆகி விட்டோமா, என்ன? நீங்கள் அப்போது எங்களைக் கேட்காமலேயே, எங்கள் அனுமதியைப் பெறாமலேயே எங்களைப் பணயம் வைத்தீர்கள், இழந்தீர்கள். இப்போது கூட எது உங்களுக்குச் சிறப்பானது என்று தோன்றி முடிவெடுத்தீர்களோ அதுவே எங்களுக்கும் உகந்ததே. ஏனெனில் நாம் ஒரே உடலில் இருக்கும் ஐந்து பிராணன்கள் போல (பஞ்ச ப்ராணன்). ஐந்து முக்கிய உறுப்புகள் ஒரே இழையில் இணைந்தது போலத் தான் அது” என்று பதில் கூறினான்.
அவர்களின் உடல் ஒன்றே; அதில் கிருஷ்ணரே இதயம்.
கோபர்களுக்கும் கோபிகைகளுக்கும் கிருஷ்ணரே இதயம். பாகவதத்தில் இப்படித் தான் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அவர்கள் கிருஷ்ணரை தங்கள் பதியாக, எஜமானனாக, இறைவனாக நினைத்தார்கள், உண்மையில் சொல்லப் போனால் கிருஷ்ணரை மட்டுமே அவர்கள் ஒரே புருஷனாகக் கருதினார்கள். மற்றவர்கள் எல்லாம் அ-பலைகள், பெண்கள், பலவீனமானவர்கள், பலவீனமான பெண்கள். துன்பம் வரும் நேரத்தில் மிகப் பெரும் வீரன் கூட தனிமையில் மௌனமாகப் புலம்பி அழுகிறான்.
அவர்களுக்கும் கூட மற்றவர்களுக்கு ஏற்படுவது போலவே, என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலை உருவாகிறது எதையும் முடிவு செய்ய முடியாத நிலையில் சந்தேகம் சூழ்ந்த நிலையில் அவர்கள் பிரார்த்தனை புரிந்து உதவி கேட்கிறார்கள். அவர்களும் பலவீனமானவர்களே. இறைவன் ஒருவனே எல்லாக் காலங்களிலும் வலிமை வாய்ந்தவன். எவற்றாலும் அசைக்க முடியாதவன். அனைவருக்கும் பலத்தைத் தருபவன்.
ஆகவே நீங்கள் கோபியரின் ப்ரேமை பற்றிப் படிக்கும் போது எல்லா உயிர்களும் பெண்களே, இறைவன் ஒருவனே புருஷன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ப்ரேமை ஒன்றினாலேயே இறைவன் தன்னை வெளிக்காட்டத் தூண்டப்படுவான். ஞானம் கைகூடும்.
இப்போது நான் பேச்சை நிறுத்த வேண்டும்; ஏனெனில் பங்களூரில் உள்ள பக்தர்கள் ஒரு புஷ்ப ஊஞ்சலை இங்கே அமைத்திருக்கிறார்கள்; அதில் நான் அமர்ந்து ஊஞ்சலாட வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இதை நான் ஆதரிக்கவில்லை. உங்கள் இதய ஊஞ்சலில் ஆடுவதால் நான் எவ்வளவு ஆனந்தம் அடைவேன் தெரியுமா?
ஓம்காரம் என்னும் ஊஞ்சலில் ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களின் இதயத்திலிருந்து தத் – த்வம் – அஸி என்ற ராகம் இசைக்கப்படும்போது அது எவ்வளவு பிரமாதமாக இருக்கும்! உங்கள் இதய ஊஞ்சலில் நீங்கள் மஹாதேவரை உட்காரவைக்கவில்லை, மனதை உட்கார வைத்திருக்கிறீர்கள். ஆகவே தான் மனிதகுலத்திற்கு அமைதியும் சந்தோஷமும் மறுக்கப்பட்டிருக்கிறது.
24-10-1966 அன்று தசரா விழாவில் பகவான் பாபா ஆற்றிய அருளுரை