
இராமாயணக் காவியப் போரில் ஸ்ரீ ராமன் செலுத்திய அம்பினால் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரியாமல் இருந்தது. அப்போது ஸ்ரீ ராமர், லட்சுமணனிடம், “லட்சுமணா… ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன். ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீ அவனிடம் சென்று நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா” என்று கூறி அனுப்பினார்.
அதனைக் கேட்ட லட்சுமணன், பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று, “லங்கேஸ்வரா, உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும். எனவே, எனக்கு உபதேசியுங்கள்” என்று வேண்டி நின்றான்.
லட்சுமணனை சிரித்துக்கொண்டே வரவேற்ற ராவணன், ஸ்ரீ ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தனது அனுபவ அறிவுரைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
“லட்சுமணா, ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவகிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே அது உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால், அந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.
அதேபோல், சூர்ப்பனகை என்னிடம், ‘சீதா தேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள்’ என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப்போடாமல் உடனே புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.
இதனால் நான் சொல்ல விரும்புவது என்னவெனில், நல்ல செயலை உடனடியாக செய்து முடித்தால் அது பலன் தரும். தீய செயலைத் தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.
அதேபோல், உனது சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள். தொடர்ந்து நீ வெற்றி வாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணி விடாதே. உனது குற்றங்களை சுட்டிக்காட்டும் நண்பனை நம்பு.
நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டு விடாதே. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.
பொறுமையை விட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.
லட்சுமணன், ராவணனை வணங்கி அவன் தந்த உபதேசங்களைப் பெற்றுக் கொண்டு திரும்பினான்.