வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வாஸ்து உண்டு. வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட பொருட்களுக்கு அதீத சக்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் பீரோ, கடிகாரம், கண்ணாடி போன்றவையும் அடங்கும். ஒரு வீட்டில் கண்ணாடி எங்கெல்லாம் வைக்க வேண்டும்? எப்படி வைக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் உண்டு. இதற்கேற்ப சாதகமான பலன்களும், துரதிர்ஷ்டமும், அதிர்ஷ்டமும் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு வீட்டில் கண்ணாடியை கண்ட இடத்தில் எல்லாம் வைக்கக் கூடாது. இவ்வாறு வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் பெருகுவதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாக, கண்ணாடியை வரவேற்பறையில் வைக்கும்போது உள்ளே வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி வைக்கக் கூடாது. சிலர் திருஷ்டிக்காக வைக்கப்படும் கண்ணாடியை வரவேற்பறையில் வைக்கிறார்கள். திருஷ்டி போக்க வைக்கப்படும் கண்ணாடியானது கட்டாயம் வரவேற்பறையில் வைக்கக் கூடாது. வீட்டின் வெளிப்புறத்தில்தான் அமைக்க வேண்டும். பிரதான வாசலை, அதாவது மெயின் கேட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே வரும்போது அவர்களுடைய முகம் அதில் தெரிய வேண்டும். அப்படியான அமைப்பை கொண்ட கண்ணாடிதான் உண்மையில் திருஷ்டியை போக்கும். வீட்டின் நிலைவாசலை தாண்டி உள்ளே வரும்போது முகம் தெரியும்படியான கண்ணாடியை வைத்திருக்கக் கூடாது.
பூஜை அறையில் கண்ணாடியை கட்டாயம் வைக்க வேண்டும் என்பது சாஸ்திர ரீதியாகவும், இதை பண்டைய காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு நம் முன்னோர்கள் செய்து வருகின்றனர். பூஜை அறையில் கண்ணாடியை வைப்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் வல்லது கொண்டது. குலதெய்வம், பித்ருக்கள் போன்று நம்முடன் இருக்கும் மறைமுக தெய்வங்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பதாக சாஸ்திரங்களின் குறிப்புகள் உள்ளன.
பூஜையறையில் தண்ணீர் வைப்பதும் கண்ணாடி வைப்பதும் இதற்காகத்தான். தண்ணீரிலும் கண்ணாடியிலும் முன்னோர்கள் பிரதிபலிப்பதாகவும் வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. குலதெய்வம் தெரியாதவர்கள் கண்ணாடிக்கு சந்தன பொட்டு வைத்து பூஜை செய்தாலே போதும். உங்களுடைய குலதெய்வம் அதில் முகத்தைக் காண்பிக்குமாம். இதனால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். உடைந்த கண்ணாடியை ஒருபோது வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இது கெடு பலன்களைத் தரும்.
குளியல் அறையில் முகம் மட்டும் தெரியும்படியான கண்ணாடி அமைக்கலாம். படுக்கையறையில் இடம் பெற்றிருக்கும் கண்ணாடி ஆள் உயர கண்ணாடியாக இருக்கலாம் அல்லது முட்டி வரை தெரியும் கண்ணாடியாக இருக்கலாம். முகம் மட்டுமே தெரியும் கண்ணாடியாகவும் இருக்கலாம். அவற்றைத் தவிர்த்து வெவ்வேறு வடிவங்களில் வரும் இடுப்பு உயர கண்ணாடி, மார்பு வரை தெரியும் கண்ணாடியை மாட்டி வைப்பது துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
படுக்கையறையில் இருக்கும் கண்ணாடியை கட்டாயம் இரவு படுக்கும்போது திரை போட்டு மூடி வைக்க வேண்டும். படுக்கையறையில் தூங்கக்கூடிய இடத்தில் கண்ணாடியை திரை போட்டு மூடாமல் இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் கணவன், மனைவிக்குள் புரிதல் இல்லாமலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து காணப்படுமாம். எனவே, படுக்கையறையில் இருக்கும் கண்ணாடியை மட்டும் எப்போதும் திரை போட்டு மூடி வைத்திருப்பது அவசியம்.
பூஜையறையில் கண்ணாடி வைப்பது, தீய சக்திகளை வெளியேற்றி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். பிரார்த்தனைகள் நிறைவேற உதவும். ஆன்மிக சக்தி பெருகும். உடலின் நாடியை திறக்கவும், தெய்வ நாடியுடன் மனித நாடியை ஒன்றிணைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இது வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்கி மன நிம்மதியைத் தரும். கண்ணாடியை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி வைப்பது நல்லது. உடைந்த கண்ணாடி எதிர்மறை ஆற்றைலை உருவாக்கும் என்பதால் அதை உடைந்து விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.