
பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகும். நீண்ட நாட்களாக திதி கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்தப் பாவம் பதினாறு அகத்திக்கீரைகளை பசுவிற்குத் தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் நீங்கி, சுக வாழ்வு ஏற்படும்.
பசுவை ஒருமுறை பிரதட்சிணம் செய்தால் பூலோகம் முழுவதும் பிரதட்சிணம் செய்த புண்ணியம் கிடைக்கும். பசுவை பூஜித்தால் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த பலன் கிடைக்கும்.
பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும், பசுவின் கழுத்தை சொறிந்து விட்டாலும் கொடிய பாவங்கள் விலகும். பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம், ‘கோதுளி காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் புண்ணியமான வேளை ஆகும்.
பசு நடக்கும்போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்தானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்கரவர்த்தி மற்றும் தசரத சக்கரவர்த்தி போன்றோர் பூசிக் கொண்டனர். பசு, ‘மா’ என்று கத்தும்போது அப்பகுதிக்கு அது மங்கலத்தைத் தருகிறது.
பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து மந்திரமோ, ஜபமோ, தர்ம கார்யங்களோ செய்ய, அது 100 மடங்கு பலனைத் தருகின்றன. மனிதனின் கண்களுக்குத் தெரியாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவேதான், ஒருவர் இறக்கும்போது பசு சத்தம் போடுகிறது.
ஒருவர் இறந்த பிறகு பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரண்ய நதியைக் (மலம், ஜலம், சளி, சுடுநீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசு தானம் செய்தவர்க்கு இந்தத் துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த மாடு அங்கு தோன்றி, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம்.என்று கருட புராணம் கூறுகிறது.
உலகத்தில் எந்த பாதிப்பு நடந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடத்தில் மட்டும் எந்த பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.