நம்முடைய அனைவர் வீட்டிலும் நிச்சயமாக ஒரு விநாயகர் படமோ அல்லது சிலையோ இருக்கும். வீட்டின் வாசலில் கண் திருஷ்டி விநாயகர், நிலை வாசல்படியில் முச்சந்தி விநாயகர் என்று வைத்திருப்போம். இப்படி விநாயகரை வைக்கும்போது அவருடைய தும்பிக்கை வலப்புறம் அல்லது இடப்புறம் இருக்க வேண்டுமா? இல்லையென்றால் நேராக இருக்க வேண்டுமா? என்பதைப் பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.
விநாயகர் அருள் இல்லாமல் எந்தக் காரியத்தையும் தொடங்க முடியாது. எல்லாவற்றிற்கும் முழுமுதற் கடவுளாக விளங்குபவர் விநாயகர் ஆவார். அத்தகைய விநாயகரின் சிலையை வாங்கும்போது அதில் தும்பிக்கை எந்தப் பக்கம் இருக்கிறது, விநாயகர் நின்ற கோலத்தில் இருக்கிறாரா? அல்லது அமர்ந்து இருக்கிறாரா? போன்றவற்றைக் கவனிப்பது மிகவும் அவசியமாகும்.
விநாயகர் சிலை வாங்கும்போது, தும்பிக்கை வலப்பக்கம் இருப்பதுபோல் காட்சி தந்தால், அவரை ‘வலம்புரி விநாயகர்’ என்று கூறுவர். வலம்புரி விநாயகர் சூரிய பகவானின் அம்சம் பெற்றவராகச் சொல்லப்படுகிறது. வலம்புரி விநாயரை நிறுவனம், தொழில் செய்யும் இடம், கடைகளில் வைத்து வழிபடும்போது நல்ல முன்னேற்றம் மற்றும் லாபம் அதிகரிக்கும். நல்ல ஆற்றலையும், சக்தியையும், உத்வேகத்தையும் தரும்.
வலம்புரி விநாயகரை வைத்து வழிபடும்போது நல்ல சுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வலம்புரி விநாயகர் இருக்கும் இடம் கோயிலுக்கு இணையாக தூய்மையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
இடம்புரி விநாயகர் சந்திர பகவானை குறிக்கிறது. மேலும், பராசக்தி சிவபெருமானின் இடதுப்பக்கம் இருப்பதால், இடம்புரி அமைப்பு மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இடம்புரி விநாயகர் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அந்த வீட்டில் அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும், கண் திருஷ்டியைப் போக்கும் என்று சொல்லப்படுகிறது.
விநாயகர் சிலையில் தும்பிக்கை நேராக இருந்தால், அதை வழிபடும் நபருக்கு சக்தியையும், ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. பெரிய தலை கொண்ட விநாயகர் சிலையை வழிபடுவதன் மூலம் அது நமக்கு ஞானத்தையும், சக்தியையும், வலிமையையும் கொடுக்கும்.
வெள்ளெருக்கு செடியின் வேரில் இருந்து செய்யப்படும் விநாயகர் சிலையை வைத்து வழிபடும்போது அந்த வீட்டிற்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும், தீயசக்திகள் அண்டாது என்று சொல்லப்படுகிறது. குபேர விநாயகரை வைத்து வழிபடும் போது அந்த வீட்டில் சகல சௌபாக்கியமும், லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும்.
பாதரச விநாயகரை வைத்து வழிபடும் போது படிக்கும் பிள்ளைகளுக்கு எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி புத்திக்கூர்மையை அதிகரிக்கிறது. நவதானிய விநாயகரை வைத்து வழிபடும்போது உணவுக்கு பஞ்சமே வராது என்றும் நவகிரகங்களின் ஆசிகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் நீங்கள் எந்த விநாயகர் சிலையை உங்கள் வீட்டில் வைத்து வழிபடுகிறீர்கள்? என்று சொல்லுங்கள்.