
தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கி இருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம், ‘தாங்கள் எழுதிய திருவாசகத்தை நீங்கள் ஒரு முறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் அதை எழுதிக்கொள்கிறேன்’ என்றார்.
உடனே மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்லச் சொல்ல சிவபெருமான் எழுதிக் கொண்டார். எழுதிய திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச்சுவடிகளையும் பெருமான் நடராஜர் சன்னிதி முன்பு வைத்துவிட்டு மறைந்து விட்டார்.
மறு நாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கூத்தபெருமான் சன்னிதியில் நிறைய ஓலைச்சுவடிகளைக் கண்டு திகைத்துப் போயினர்.
ஓலைச்சுவடிகள் அத்தனையையும் எடுத்துப் பார்த்த தீட்சிதர்கள், கடைசி ஓலையில் ‘மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என கையொப்பம் இடப்பட்டிருந்தது.
மீண்டும் திகைத்துப் போய், பெருமானின் கருணையை எண்ணி வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றைக் கூறி அவரை அழைத்து வந்தார்கள்.
ஓலைச்சுவடிகளில் உள்ள ஒவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய், ‘ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டதுதான்’ என்று சொல்லி, வந்தது பெருமான்தான் என நினைத்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
தீட்சிதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். அதைக்கேட்ட மாணிக்கவாசகர் மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராஜப்பெருமானைக் காட்டி, ‘இப்பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்’ என்றார்.
அப்படி மாணிக்கவாசகர் கூறியதும், ஈசன் அங்கே ஒளி வடிவாய் காட்சியளிக்க, அதை நோக்கி உள்ளே சென்ற மாணிக்கவாசகர், சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.
‘நமசிவாய’ என்னும் ஐந்து எழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவ புராணம் தொடங்குகிறது. சிவ புராணத்தின் முதல் ஆறு வரிகள் ‘வாழ்க’ என முடியும். அதையடுத்த ஐந்து வரிகள் ‘வெல்க’ என முடியும். அடுத்த எட்டு வரிகள் ‘போற்றி’ என முடியும். இப்படி, 6 - 5 - 8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களைக் குறிக்கிறது.
சிவ மகாபுராணத்தின் 32வது வரியில், ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’ எனப் பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிப்பதாகும். திருவாசகத்தின் 18வது வரியான, ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று படிப்பவர் அனைவர் மனதையும் உருக்குவதாக இருக்கும்.
ரமண மகரிஷி திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
காஞ்சி மகாபெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை அவரிடம் கூறினர். மகாபெரியவர் திருவாசக புத்தகம் ஒன்றைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினமும் படிக்கச் சொன்னார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு வரிசையாக ஆறு குழந்தைகள் பிறந்தன. சிவ மகாபுராணத்திற்கு இத்தனை மகிமைகள் உள்ளன.