
ஒரு சமயம் வசிஷ்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அவரது ஆசிரமத்திற்கு எழுந்தருளினார் விநாயகர். அவருக்குப் பிடித்த புதிய நிவேதனம் ஒன்றை தயார் செய்ய விரும்பினார் வசிஷ்டரின் மனைவி அருந்ததி. சர்வ வியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார். அருந்ததி அண்டத்தை உணர்த்த மாவின் செப்பு என்ற மேல் பகுதியை செய்தால் அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரை குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை மாவுக்குள் வைத்தார். அதுவே மோதகம் எனும் கொழுக்கட்டை. அருந்ததி உருவாக்கிய புதிய இனிய மோதகத்தை கணபதியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாராம்.
விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்துவிட்டு அதை குழந்தைகள் சாப்பிட்டால் புத்திசாலித்தனமாக விளங்குவார்கள், கல்வியில் மேன்மை உடையவராக திகழ்வார்கள் என பத்ம புராணம் கூறுகிறது. மோதகம், கரும்பு, அவல் பொரி ஆகியவற்றை கணபதிக்கு விநாயகர் சதுர்த்தியன்று படைக்க வேண்டும். இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் ஒன்று அடங்கிக் கிடக்கிறது.
மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும் உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக்கொண்டால் கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இது படைக்கப்படுகிறது.
கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் கரும்பு இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான் கஷ்டப்பட்டால் இனிமையை காணலாம் என்ற தத்துவத்தின்படி படைக்கப்படுகிறது. அவல் பொரி ஊதினாலே பறக்கக்கூடியவை. இப்பொருட்கள் வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித் தள்ளிவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
விநாயகருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?
வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது தடை ஏற்பட்டது. விநாயகரை வேண்டிக்கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினர்.
மறுகணமே அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையை தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே, ஈசன் தன்னைப் போல் மூன்று கண்களும் சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்தருளினார். அன்று முதல் தடைகள் நீங்கிட விநாயகருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏற்பட்டது.