
சிவபெருமான் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒரு சமயம் பிரம்மாவிற்கும் மகாவிஷ்ணுவிற்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப்பெரிய அக்னி கோலமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக ஈசன் எடுத்த லிங்க வடிவம் ஆகும். அன்று முதன் முதலாக லிங்கோத்பவம் உதயமாயிற்று.
லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க வடிவில்தான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பல வகையாகக் கூறப்படுகின்றன. அவை குறித்து இனி பார்ப்போம்.
சுயம்பு லிங்கம்: தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
தெய்வீக லிங்கம்: தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகளின் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
மனுஷ்ய லிங்கம்: மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம்.
க்ஷணிக லிங்கம்: அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களுக்கு ஏற்றவாறு பூஜை செய்யப்படும் லிங்கம்.
வர்த்தமானச லிங்கம்: நடுவில் ருத்ர பாகம் மட்டும் இரு மடங்காக இருப்பதே வர்த்தமானச லிங்கம். இதனை வழிபடுவோருக்கு முக்கி அளிக்க வல்லது.
ஆத்ம லிங்கம்: இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும்.
இவை தவிர புண்டரீகம், விசாலா, ஸ்ரீவத்சா, சத்ருமர்த்தனா என நான்கு வகை லிங்கங்கள் பக்தர்கள் வழிபாட்டில் உள்ளன.
புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பேரும் புகழும் கிடைக்கும். விசாலா வகை லிங்கத்தை வழிபட பெரும் பொருள் கிடைக்கும்.
ஸ்ரீவத்சா லிங்கத்தை வழிபட எல்லா வளங்களும் நலன்களும் கிடைக்கும்.
சத்ருமர்த்தனா லிங்கத்தை வழிபட அனைத்திலும் வெற்றியைத் தரும் என்கிறது சாஸ்திரம்.
‘ஓம் நமசிவாய’ என்ற போற்றியைக் கூறி வழிபட்டால் ஈசனின் பேரருளைப் பெறலாம்.