
வனவாசம் முடிந்து ஸ்ரீராமர், சீதோ தேவியோடு அயோத்தி திரும்பினர். ஸ்ரீராமரின் பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ‘ஸ்ரீராம – ராவண யுத்தத்தில் உயிர்களைக் கொன்ற பாவம் தீர எள் தானம் செய்ய வேண்டும்’ என குலகுரு வசிஷ்டர் ஸ்ரீராமரிடம் தெரிவித்தார். எள் தானம் பெற்றால் பாவம் சேரும் என்பதால் யாரும் முன் வரவில்லை. இந்நிலையில், ‘எள் தானம் பெறுவோர்க்கு தங்கக் கட்டிகள் பரிசாகத் தரப்படும்’ என அறிவிக்கச் சொன்னார் வசிஷ்டர்.
அயோத்தி நகரின் எல்லையில் வாழ்ந்த சிருங்கார முனிவர் - சொர்ணவல்லி தம்பதிக்கு இந்தச் செய்தி எட்டியது. ‘எள் தானம் பெற்று தங்கக் கட்டிகளை பரிசாகப் பெற்றால் தங்களது ஏழ்மை நீங்குமே’ எனக் கருதிய சொர்ணவல்லி, தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள்.
முனிவர் அதைக் கேட்டு கொதித்து விட்டார். ‘தங்கத்திற்கு ஆசைப்பட்டு பாவத்தை சேர்க்கச் சொல்கிறாயா?’ என்றார். ‘உங்களுக்கு நான் பாவம் சேர நினைப்பேனா? மகாவிஷ்ணுவின் சொரூபம் ஸ்ரீராமர். எள் தானம் பெற்றதும் அவரது முகத்தை ஒரு முறை பாருங்கள். அந்த நொடியே அனைத்துப் பாவங்களும் ஓடிவிடும். தானம் பெற்றால் நமது வறுமை நீங்கும் என்ற நம்பிக்கையில்தான் சொன்னேன். என்னை மன்னியுங்கள்’ என்றாள்.
இதனால் சமாதானம் அடைந்த முனிவரும் ஸ்ரீராமரிடம் எள் தானம் பெறத் தயாரானார். இந்த விஷயம் ஊர் எங்கும் பரவியது. ‘சிருங்கார முனிவர் எப்படிப்பட்ட தவசீலர். அவரது புத்தி ஏன் இப்படிப் போனது? தங்கத்திற்கு ஆசைப்பட்டு தன்னை இவ்வளவு தாழ்த்திக்கொள்ள வேண்டுமா?’ என ஊரார் பேசினர்.
சிருங்கார முனைவரின் திட்டத்தை அறிந்தார் குருகுல வசிஷ்டர். ‘தானம் பெறும்போது ஸ்ரீராமரின் முகத்தைப் பார்த்தால் தானம் பயன் தராமல் போகுமே’ என்று யோசித்த வசிஷ்டர், ஒரு திட்டம் தீட்டினர். சிருங்கார முனிவருக்கு எள்ளை தானமாகக் கொடுத்ததுமே சட்டென இருவருக்கும் இடையில் ஒரு திரை விழுந்தது. அதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில்ஆழ்ந்த முனிவர் துயரத்துடன் அங்கிருந்து புறப்பட்டார். அதற்குள் முனிவரின் குடிலுக்கு தங்கக் கட்டிகள் வந்து சேர்ந்தன.
கணவரை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சொர்ணவல்லி. நடந்ததைக் கேட்டு நடுங்கினாள். இருந்தும் மனம் தளராமல் யோசித்தாள். ‘சுவாமி, கவலை வேண்டாம். பட்டாபிஷேக நாளன்று ஸ்ரீராமர் பவனி வருவார். அப்போது அவரது திருமுகத்தை தரிசித்தால் நமது பாவம் அனைத்தும் பறந்தோடும் என்றாள். முனிவருக்கும் அது சரி எனப்பட்டது. அந்த நாளுக்காக காத்திருந்தார் முனிவர்.
அயோத்தி மாநகரின் ராஜ வீதியில் பவனி வந்த ஸ்ரீராமரை கண் குளிர மோகனப் புன்னகையுடன் தரிசித்தார் முனிவர். முனிவரைக் கண்ட ஸ்ரீராமர், ‘முனிவரே உமது பாவம் எல்லாம் இந்தக் கணமே விலகியது. இனி உங்களது தவ வாழ்வு நன்கு சிறக்கும்’ என வாழ்த்தினார். அந்த வாழ்த்தையே மந்திரமாக ஏற்ற சிருங்கார முனிவர் அதன் பின் தங்கக் கட்டிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.