
முருகன் என்றாலே ‘அழகன்’ என்ற ஒரு பொருள் உண்டு. அந்தப் பொருளுக்கு ஏற்றவாறு அழகான ஆறு முகங்கள் உண்டு. ஆறு முகங்களில் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தத்துவத்தை நமக்குச் சொல்கின்றன. கந்தனின் கருணை முகம் கொண்ட ஆறு முகத்தை பற்றியும் அதன் தத்துவத்தைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
முருகனிடம் மும்மூர்த்திகளின் அம்சம் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் சுடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே, ‘முருகா' என்ற பெயராகும்.
இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, வெளிச்சம் தருகிறது ஒரு திருமுகம். இத்திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது.
அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.
வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.
நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.
துஷ்ட சம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.
தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.
இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு திருக்கரங்களோடு நீல மயில் மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார். நீல மயில் ஓங்கார சொரூபம். ஒங்காரமே பிரம்மம். அகர, உகர, மகர ஒலிகள் கூடியதுதான் ஓங்காரம். இந்தத் தத்துவம்தான் முருகன். ‘முருகா’ என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.
‘சரவணபவ' என்னும் சடாட்சர மந்திரத்தை மனதில் நினைத்து, 'குகாய நம ஓம்’ என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள்புரிவான். முருகனின் ஆறு படை வீடுகளை நினைத்தாலே மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. முருகப் பெருமான் இந்த ஆறு படை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.
சஷ்டி திருநாளில், ‘முருகா முருகா' என்று மனமுருகி வணங்கினால், நிலையான இன்பம் அளித்து முருகன் நம்மைக் காப்பான். ஆறுமுகத்தை வழங்கினால் என்றுமே நமக்கு வாழ்வில் ஏறுமுகம்தான்.