
1878ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பிறந்த ஸ்ரீ அன்னைக்கு மிர்ரா அல்ஃபாஸா என்று பெற்றோர் பெயரிட்டனர். இளமையிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட அவருக்கு இளம் வயதில் தினந்தோறும் தியானத்தில் ஆழ்வதும் இறைஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது.
சிறுமியாக இருந்தபோது தினந்தோறும் அவருக்கு ஒரு கனவு வரும். அதில் அவர் தன் உடலை விட்டு வெளியேறி சூட்சும உருவத்தில் மேலே மேலே சென்று மேகக்கூட்டங்களிடையே சஞ்சரிப்பது போல உணர்வார். அவருடைய ஒளி வீசும் உடலை ஒளிமயமான ஒரு ஆடை தழுவி நிற்கும். அவரை நோக்கி உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், நோயாளிகளும், துன்பமுற்றவர்கள், துயரமிக்கவர்கள் எல்லோரும் வந்து நிற்பர். தனது கருணை பொங்கும் விழிகளால் அவர்களை பார்ப்பார் சிறுமி மிர்ரா.
அவருடைய ஒளிமயமான உடையை தொட்டவுடன் சிலருக்கு பிணி விலகும். துயருற்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சிலரது குறைகள் உடனடியாக விலகும். மிக்க மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் அவர்கள் தங்கள் இருப்பிடம் நோக்கித் திரும்பிச் செல்வர். அதே போல, அவர் கனவில் ஒளி வீசும் கண்களுடன் நீண்ட தாடியுடன் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர் இந்தியத் தத்துவங்கள், வேத உபநிஷத்துகள் பற்றி மிர்ராவுக்கு எடுத்துரைத்தார். பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்தபோது, அவரே தனக்கு கனவில் வந்து உபதேசித்தவர், அவரே தனது குரு என்று கண்டு கொண்டார் மிர்ரா.
ஸ்ரீ அன்னை மிக உயர்வான நேர்மறை சிந்தனைகளை நம்முள் விதைத்து மனித குலத்தை உயர்த்தவே அவதாரம் எடுத்தவர். ஸ்ரீ அன்னையின் பூத உடல் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டு விட்ட போதிலும், இன்றும் சூட்சும ரூபத்தில், சமாதியிலும் ஆசிரமத்திலும் புதுவையைச் சுற்றி வெளியிலும், பக்தர்கள் உள்ளத்திலும், வாழ்விலும் நிரந்தரமாகச் செயல் புரிந்து, அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ அன்னையை வழிபட அர்ச்சனையோ மந்திரங்களோ தேவையில்லை. ஆற்றல் மிக்க வண்ண வண்ண மலர்களை கொண்டு வழிபாடு செய்தாலே போதும். மென்மைக்கு உதாரணமாக மலர்களைச் சொல்வோம். மலரினும் மென்மையானவர் அன்னை.
மலர்களைப் பற்றி தான் எவ்வளவு அருமையான தகவல்களை ஸ்ரீ அன்னை கூறியுள்ளார்? அன்னைக்கு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மலரும் தனக்குரிய குணத்தை சமர்ப்பித்தவருக்குப் பெற்றுத் தருமாம்.
பக்தி உணர்வு மிகுந்திட துளசி, பக்தி மனப்பான்மைக்கு வில்வ இலை, வளமைக்கு நாகலிங்கப் பூ, பெருமையையும் கௌரவத்தையும் பெற ரோஜாப்பூ, புதிய திறமைகளைப் பெற சம்பங்கிப்பூ, என்றும் அழியாத்தன்மையை அளித்திடும் வாடாமல்லிப்பூ, எந்த விதமான தடையையும் தகர்த்து நமக்கு மன தைரியத்தை பெற்று தரும் எருக்கம்பூ, வேப்பம்பூ இனிமைக்கு, குரோட்டன்ஸ் மலர் பூரண பாதுகாப்பிற்கு, செய்யும் காரியங்களில் வெற்றி பெற வெள்ளை செம்பருத்தி, புதிய சிருஷ்டிக்கு லில்லிப்பூ, விஸ்வாசத்திற்கு ரங்கோன் மல்லி, பூரண ஆரோக்கியத்திற்கு சாமந்திப் பூ, உறவுகளிடையே சுமுகம் ஏற்பட கொடி ரோஸ்... என்று எத்தனை எத்தனை வகையான பூக்கள்?
வீட்டில் ஸ்ரீ அன்னையின் புகைப்படத்தை வைத்து எதிரே வரிசையாக தட்டுகளில் பக்தர்கள் வண்ண வண்ண மலர்களை வைத்து ஸ்ரீ அன்னையை வழிபடுவார்கள். ஸ்ரீ அன்னைக்கு சம்பர்ப்பிக்கப்படும்போது இந்த மலர்கள் எத்தனை எத்தனை அற்புதமான குணங்களை நமக்குப் பெற்றுத் தரும்?
21.02.2025 (வெள்ளிக்கிழமை) அன்று வரும் ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளை விதவிதமான வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் அஞ்சலி செய்து கொண்டாடி, 'மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே' என்று வேண்டி துதித்து ஸ்ரீ அன்னையின் அருளாசியை வேண்டிப் பெறுவோம்.