
கவேரன் என்ற மன்னர் குழந்தைப் பேறு வேண்டி பிரம்மாவை நோக்கித் தவமிருந்தார். இதனால் மகிழ்ந்த பிரம்மா, தனது மகளாகிய விஷ்ணு மாயையை அவருக்கு மகளாகத் தோன்றச் செய்தார். இவளைத்தான் அகத்தியர் திருமணம் செய்து கொண்டார். இவளே நதியாக ஓடி நம்மைத் தாயாகக் காத்துவரும் காவிரி.
ஒரு நாள் தமிழ்நாட்டின் மேற்கேயுள்ள குடகு மலையில் தவம் செய்து கொண்டிருந்தார் அகத்தியர். அப்போது அவர் கமண்டலத்தில் காவிரியை நீர் வடிவாக்கி அடக்கி வைத்திருந்தார். அந்த சமயத்தில் தேவலோகத் தலைவனான இந்திரனுக்கு, உதவும் வகையில் கமண்டலத்தை கவிழ்த்து விட்டார் விநாயகர். அப்போது பிரவாகமாகப் பொங்கி வந்தவள்தான் காவிரி.
கர்நாடகத்தில் பிறந்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பவள் காவிரி. இவள் வழியெங்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பொன் விளையும் பூமியாக்குகிறாள். பல்வேறு திருத்தலங்களை நோக்கிப் பாயும் இவள், புண்ணியத்தையும் சேர்க்கிறாள்.
பிரம்மகிரி மலையில் உற்பத்தியாகும் இவளை, அங்குள்ளவர்கள் அம்மனாகவே வழிபடுகின்றனர். இதுதான் தலைக்காவிரி எனப்படுகிறது.பிறகு மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நுழைந்து அங்கு அரங்கநாதரை சேவிக்கிறாள். பிறகு தமிழ்நாட்டில் ஒகேனக்கல் தேசநாதீஸ்வரை வந்தனம் செய்கிறாள். அடுத்து, சேலம் மாவட்டம் காவேரிபுரத்தில் ஜலகண்டேஸ்வரரிடம் வந்து பிறகு மேட்டூர் சொக்கநாதரை நோக்கிப் பயணமாகிறாள்.
காவிரியுடன் பவானி ஆறும், ஆகாய மார்க்கமாக அமிர்த ஆறும் சங்கமிக்கின்றன. எனவே, இது தென் திரிவேணி சங்கமம் எனப்படுகிறது. இங்கு பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரரின் பாதங்களில் சரணடைகிறாள். பிறகு, கரூர் பசுபதீஸ்வரரை பார்த்து பிறகு தனது பிறவி தாகத்தைத் தணிக்க திருச்சி ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கிறாள்.
அதன் பின் கல்லணையைக் கடந்து தஞ்சைக்குள் தஞ்சம் புகுகிறாள். இங்கு பெருவுடையார் தரிசனம் மூலம் தன்னை புதுப்பித்துக்கொண்டு புது வெள்ளமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகுந்து வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறாள்.
இப்படிப் பாயும் இடமெல்லாம் பவித்ரமாக்கும் காவிரியை ஆடிப்பெருக்கு நாளில் வணங்கி மகிழ்வோம். காவிரியை வழிபட, நமது வாழ்வு நிறைவானதாக மாறும்.