சேலம் வண்டி வேடிக்கை நிகழ்வைப் பார்த்திருக்கிறீர்களா?

Salem Cave Mariamman Vandi Vedikkai
Salem Cave Mariamman Vandi Vedikkai
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சேலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை 22 நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோயிலை மையமாகக் கொண்டு, அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களிலுள்ள அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வருவார். இந்தத் திருவிழாவில் உருளு தண்டம், தீமிதி விழா மற்றும் வண்டி வேடிக்கை போன்றவை சிறப்பு பெற்றவைகளாக இருக்கின்றன. 

சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கும் மேலாக, மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான வண்டி வேடிக்கை நிகழ்வு வருகிற ஆகஸ்ட் 8 ஆம் நாள் நடைபெற இருக்கிறது. 

கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விண்ணுலகக் கடவுளர்களின் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவதுதான், இந்த வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பாக இருக்கிறது.

இத்திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு இருந்து, கடவுள் வேடமணிந்து, வண்ணமயமான வண்டிகளில் வலம் வருவர். பெரும்பாலும் புராணக்கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படுகின்றன. பெண்கள் இந்நிகழ்வில் பங்கு பெறுவதில்லை. ஆண்களேப் பெண் வேடமிட்டு வலம் வருகின்றனர்.

கடவுள் வேடமிடும் பக்தர்கள், சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் ஆகியோர் கைலசாத்தில் அமர்ந்திருப்பதைப் போன்றும், ரதி, மன்மதன் வேடம் போன்றும், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும், வண்டியில் ஊர்வலமாகச் செல்கின்றனர். அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், கிருஷ்ணன், நரசிம்மன் இரணியனை வதம் செய்தது, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலட்சி , வள்ளி, தெய்வானை வேடம் ஆகியவையும் மிகவும் நேர்த்தியாக அணியப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சில வேடங்கள் மட்டும் மாற்றம் செய்யப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
தண்ணீரைப் போற்றும் தமிழர்களின் சிறப்பு திருவிழா!
Salem Cave Mariamman Vandi Vedikkai

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 எனும் எண்ணிக்கையில் வண்டிகள் தயார் செய்யப்பட்டு, அவ்வண்டிகளில் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, ஒளி, ஒலி அமைப்புகளும் செய்யப்படுகின்றன. அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, குகைக் கோயிலை மூன்று முறைச் சுற்றிச் செல்லும். குகை மாரியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்வானது, குறிப்பிட்ட நாளில், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை நடைபெறுகிறது.  

இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியைக் காணத் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தாங்கள் வேண்டியது நிறைவேறியதும், பக்தர்கள் வண்டி வேடிக்கையில் கடவுள் வேடத்தில் வரும் அம்மனை வணங்கிச் செல்கின்றனர். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வண்டிகளில் பக்தர்கள் வேடமிட்டு வந்து அம்மனை வணங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான வண்டி வேடிக்கை நிகழ்வு வருகிற ஆகஸ்ட் 8 ஆம் நாள் நடைபெற இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com