
இந்து மதத்தில் கடவுளுக்கு நிகராக வனங்கப்படும் ஒரு உயிரினம் பசு. மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றப்படும் பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் வலம் வந்த புண்ணிம் கிடைக்கும். பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் புண்ணியமான வேளை ஆகும். பசு நடக்கும்போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும்.
பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தைத் தருகிறது. பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
மனிதனின் கண்களுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவேதான், ஒருவர் இறக்கும்போது பசு சத்தம் போடுகிறது.
ஒருவர் இறந்த பின் அந்த ஆன்மா, பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வேளை அஸிபத்ர வனத்தில் வைதரண்ய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசு தானம் செய்தவர்களுக்கு இந்தத் துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்புகள் நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்வித பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிகத்தில் உள்ள ஆழமான நம்பிக்கை.
பசு வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் மட்டுமே தற்போது சாத்தியம். ஏனென்றால், நகர்ப்புறங்களில் அதற்கான சத்தியம் மிக மிகக் குறைவே. ஆகையால், நாம் கிராமப்புறங்களுக்கு செல்லும்போது பசுவை வணங்குவோம். கோயில்களுக்குச் சென்றாலும் அங்கு இருக்கும் பசுவை வழிபடுவோம்.