

‘குருவாயூர் ஏகாதசி’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் கைசிக ஏகாதசி கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசி தினமாகும். இந்த ஏகாதசி வைகுண்ட ஏகாதசியை விடவும் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஏகாதசியன்று விரதம் இருந்தால் வருடம் முழுவதும் எல்லா ஏகாதசிகளும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கைசிகம் என்பது ஒரு வகை பண்ணாகும். வராஹ புராணத்தில் இந்த கைசிக ஏகாதசி தோன்றியதைப் பற்றிய ஒரு புராணக் கதை இருக்கிறது. பாணர் குலத்தில் தோன்றியவர் நம்பாடுவான். பெருமாள் பக்தரான நம்பாடுவான் திருக்குறுங்குடி திருத்தலத்தில் குடிகொண்டுள்ள நம்பிப் பெருமானை வழிபடுவதற்காக கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று கைசிகப் பண் இசைத்துக் கொண்டு கிளம்பினார்.
வழியில் ஒரு பிரம்ம ராட்சசன், ‘எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. எனக்கு நீதான் இன்றைக்கு உணவு’ என்று அவரைப் பிடித்துக் கொண்டான். நம்பாடுவார், ‘என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்?’ என்றவர், ‘ஆனால் நான் போய் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வருகிறேன். அதன் பின் என்னை உணவாக ஏற்றுக்கொள்’ என்றார்.
நம்பாடுவான் பெருமாள் சன்னிதிக்குச் சென்று மிக உருக்கமாக ஒரு கைசிகப் பண்ணைப் பாடினார். அவர் திரும்ப வந்தபோது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி மறைந்து விட்டது. எனவே, அவன் நம்பாடுவானை உண்ண மறுத்தான். மேலும், தனக்கு சாப விமோசனம் அருளுமாறும் அவரிடம் வேண்டினான். நம்பாடுவானும் தான் பாடிய கைசிகப் பண்ணின் புண்ணியத்தை அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இந்தக் கதை கைசிக ஏகாதசியின் சிறப்பைக் கூறுகிறது. இன்றும் திவ்ய தேசங்களில் இந்த புராணம் கைசிக ஏகாதசியன்று படிக்கப்படுகிறது. சில இடங்களில் நாடகமாக நடத்தப்படுகிறது.
இந்த ஏகாதசி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குருவாயூரில் குருவாயூர் கேசவன் என்று அழைக்கப்பட்ட கஜராஜன் மறைந்த நாள் குருவாயூர் ஏகாதசி நாளாகும். அதனால் அந்த நாள் குருவாயூர் கேசவனின் நினைவு நாளாகவும் குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது. குருவாயூர் ஏகாதசியை முன்னிட்டு, ஒரு மாதம் முன்பிருந்தே குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் விளக்கேற்றும் உத்ஸவமும் ஆரம்பித்து நடைபெறுகிறது.
கோயில் முழுவதும் லட்சக்கணக்கான விளக்குகளால் ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கிறது. இரவு நேரத்தில் எப்போதும் போல், 'யானை சீவேலி' என்றழைக்கப்படும் பிரதட்சணம் உண்டு. யானையின் மேல் ஒரு அர்ச்சகர் கையில் குருவாயூரப்பன் படத்தை வைத்துக் கொண்டு உட்கார, அந்த யானை பிரதட்சணமாக கோயில் உள்ளே வலம் வரும். ஏராளமான பக்தர்கள் கூடியிருந்து 'யானை சீவேலி'யை தரிசிப்பார்கள்.
கேரளாவில் வசிக்கும் பக்தர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட குருவாயூர் ஏகாதசி அன்று முழு விரதம் இருந்து தங்கள் ஊர்களில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு மாலையில் சென்று விளக்கேற்றி, அங்கே நடைபெறும் ஆரத்தி தரிசனம் செய்து விட்டுத்தான் தங்கள் விரதத்தை முடிப்பார்கள்.
இவ்வளவு சிறப்பு மிக்க கைசிக ஏகாதசி தினம் இன்று (01.12.2025) அனுசரிக்கப்படுகிறது. நாமும் கைசிக ஏகாதசி என்னும் குருவாயூர் ஏகாதசியன்று நம் வீட்டுக்கருகேயுள்ள பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசித்து வணங்கி வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவோம்.