

கள்ளழகர் கோவில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் ஜூலை 29-ம்தேதி அன்று நடைபெற உள்ளது.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழப்படும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கோவில் மதுரையிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெருமாள் கள்ளழகர் என்றும் அவரது மனைவியான லட்சுமி திருமகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சங்க இலக்கியங்களிலும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் இக்கோவில் திருமாலிருஞ்சோலை என்று குறிக்கப்படுகிறது. துர்வாச முனிவரிடமிருந்து சுதபவ முனிவர் பெற்ற சாபத்தைப் போக்க பெருமாள் கள்ளழகராகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.
இந்த கோவிலின் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை என்ற புனித தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் சிறப்புடையது. க்கு அருகில்) அமைந்துள்ள ஒரு புனித தீர்த்தம் நூபுர கங்கை ஆகும். விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்தபோது, பிரம்மா அவரது பாதத்தில் ஊற்றிய கங்கை நீரின் சில துளிகள் அழகர் மலையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 'நூபுரம்' என்றால் சிலம்பு என்று பொருள்.
இதன் காரணத்தினாலேயே இத்தீர்த்தம் 'நூபுர கங்கை' அல்லது 'சிலம்பாறு' என அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்டு முழுவதும் வற்றாமல் ஒரே அளவில் தொடர்ந்து வழிந்தோடிக்கொண்டே இருப்பது இதன் சிறப்பாகும்.
கள்ளழகர் கோவிலில் வீற்றிருக்கும் மூலவரின் திருமேனி 'அவரஞ்சி' என்ற அரிய வகை தங்கத்தால் ஆனது. இந்த மூலவருக்கு தினமும் செய்யப்படும் திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்), 2 மைல் தொலைவில் உள்ள இந்த நூபுர கங்கை தீர்த்தம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அழகர்கோவில் தேரோட்டம் :
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் ஜூலை 29-ம்தேதி (நாளை) நடைபெற உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு உலக பிரசித்தி பெற்றது.
அந்த வகையில் ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில், ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு நடத்தப்படும் பிரம்மோற்சவப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழா கடந்த ஜூலை 21-ம்தேதி மங்கள இசையுடன், பட்டர்களின் வேதமந்திரம் முழங்க வெகு விமர்சையாக தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ளழகர் சிறப்பு வாகன பவனி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் இன்று (ஜூலை 28-ம்தேதி) காலையில் தங்கப்பல்லக்கு, இரவில் குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
ஆடித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை 29-ம்தேதி) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டும் அதிகளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் (ஜூலை 29-ம்தேதி) மாலை புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருள்கிறார்.
அன்றிரவு பூச்சப்பரம், 18-ம்படி கருப்பணசாமி திருநிலை கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி நடைபெறுகிது. அதாவது ஆண்டிற்கு ஒருமுறை திறக்கப்படும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கதவுகள் நாளை (ஜூலை 29-ம் தேதி) மாலை திறக்கப்பட்டு தீபங்கள் ஏற்றி படிப்பூஜை, சந்தன சாத்துபடி நடக்கிறது.
கள்ளழகர் கோவிலில் உள்ள 18-ம்படி கருப்பணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பவுர்ணமி அன்று மாலையில் திருநிலைக்கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் பூஜை செய்து தீபாராதனை காண்பித்து கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் ஆடி தேரோட்டம் நடைபெறும் வருகிற 29-ம்தேதியன்று மாலையில் 18-ம்படி திருநிலைக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை செய்து தீபாராதனை காண்பித்து, சந்தனம் சாத்துதல் நடைபெற உள்ளது.
மேற்கண்ட திருவிழா நாட்களில் மட்டுமே மூலவரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பதாலும் இந்த நிகழ்ச்சியைக்காண வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
ஆடி பிரம்மோற்சவ விழா நடைபெறும் முதல் 9 நாட்களுக்கு காலை, மாலையில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி, ராஜகோபுர கதவுகளின் அரை கதவு (ஒரு பகுதி) மட்டும் தற்காலிகமாக திறக்கப்பட்டு 18 படிகள் வழியாக காவல் தெய்வங்களுக்கு சக்கரத்தாழ்வார் பலி பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தி விட்டு சன்னதி திரும்புவார். இது அபூர்வ நிகழ்வு என்பதால் இதனை காண பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.
30-ம்தேதி தீர்த்தவாரி, 31-ம்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா நிறைவடைகிறது.
அடுத்த மாதம் (ஆகஸ்ட் 12-ம்தேதி) ஆடி அமாவாசை அன்று இரவு கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளுகிறார்.