மாம்பழத்தால் அடியாரான பெண்ணின் கதை தெரியுமா?

Karaikal Ammaiyar who was blessed by Lord Shiva
Karaikal Ammaiyar who was blessed by Lord Shivahttps://brseetha.blogspot.com

காரைக்காலில் புனிதவதி என்ற ஒரு பெண்மணி வாழ்ந்து வந்தார். அவர் அதே ஊரில் வாழ்ந்த பரமதத்தன் என்ற வணிகரை திருமணம் செய்துகொண்டு, இருவரும் கணவன் மனைவியாக நீண்ட காலம் இல்லறம் நடத்தி வந்தனர். அப்போது ஒரு நாள் பரமதத்தனுக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் நெடுநாள் கழித்து அவனைச் சந்திக்க வந்தான். அவன் கையிலிருந்த இரு மாம்பழங்களை பரமதத்தனுக்கு அளித்தான். மாம்பழத்தைக் கண்டதும் அதை உண்ண வேண்டும் என்ற ஆர்வம் அவன் மனதில் எழுந்தது. அதை தனது மனைவியிடம் கொடுத்து மதிய உணவுடன் வைக்கும்படி கூறினான்.

மாம்பழத்தைப் பெற்றுக்கொண்ட மனைவி, கணவனுக்காக உணவு தயார் செய்து கொண்டிருக்கும்பொழுது, வாசலில் ஒரு சிவனடியார் வந்து யாசகம் கேட்டார். உணவு தயாராகாத நிலையில் யாசகம் கேட்பவருக்கு தனது கணவர் தம்மிடம் கொடுத்திருந்த இரு மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்கு அமுது படைத்தார். பின்னர் சாப்பிட வந்த பரமதத்தனுக்கும் ஒரு மாம்பழத்தைப் படைத்தார். பழம் சுவையாக இருக்கவே, இன்னொரு பழத்தையும் கொண்டுவரும்படி கேட்டான் பரமதத்தன்.

அதைக் கேட்டு திகைத்த புனிதவதி, நடந்ததைக் கணவனிடம் சொல்ல அச்சப்பட்டு சிவபெருமானை வேண்டினார். சிவபெருமானும் ஒரு மாம்பழத்தைத் தந்து அருளினார். அதைச் சாப்பிட்ட பரமதத்தன், ‘இது முந்தைய பழத்தை விடவும் அதிக சுவையுடன் இருக்கிறதே’ என்று சந்தேகத்துடன், ‘இது ஏது?’ என்று மனைவியிடம் கேட்டான். புனிதவதி நடந்ததைக் கூறினார். அதனை நம்ப மறுத்த பரமதத்தன், ‘இது உண்மையானால் மீண்டும் ஒரு பழத்தைப் பெற்றுக் காட்டு’ என்று மனைவியைச் சோதித்தான்.

இதையும் படியுங்கள்:
பிறக்கும் முன்பே சாபம் பெற்ற காவியம் புகழும் மாவீரர் யார் தெரியுமா?
Karaikal Ammaiyar who was blessed by Lord Shiva

மீண்டும் சிவபெருமானை வேண்டினார் புனிதவதி. சிவபெருமானும் மீண்டும் ஒரு மாம்பழத்தை அளித்தார். அதை பரமதத்தன் வாங்கி பார்க்கும்போதே மறைந்தது. பயந்துபோன பரமதத்தன், ‘இவள் சாதாரண பெண் அல்ல’ என்று உணர்ந்து. ‘போற்றுதலுக்குரிய சிவபக்தை இவர். இனி இவரோடு இல்லறம் நடத்துவது நல்லறமாகாது’ என்று எண்ணி வெளியூர் சென்று விட்டான்.

அங்கு ஒரு புது தொழில் தொடங்கி, வியாபாரத்தோடு ஒரு பெண்ணையும் மணந்து கொண்டான். புனிதவதியிடமிருந்த அன்பாலும், மரியாதையாலும் தனக்குப் பிறந்த பெண்ணுக்குப் புனிதவதி என்றே பெயர் இட்டான். இதையெல்லாம் கேள்வியுற்ற புனிதவதி துடித்தார். ‘கணவன் காணாத அழகு இனி எனக்கு எதற்கு?’ என்று எண்ணி தனது அழகிய உருவத்தை விடுத்து, பேய் உருவத்தைச் சிவபெருமானிடம் வேண்டிப் பெற்றார். அதுமட்டுமின்றி, சிவபெருமானே புனிதவதியை அம்மா என்று அழைத்ததால் இவரை காரைக்கால் அம்மையார் என்றே அனைவரும் அழைத்தனர். இல்லறத்தை விடுத்து துறவறத்தின் மூலம் மோட்சம் பெற்று சிவனை அடைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com