
மஹாபாரதத்தில் கடவுள் விஷ்ணு, கிருஷ்ணராக அவதாரம் எடுத்திருந்தாலும் , காண்டிபதாரி அர்ஜூனன் இருந்தாலும், பெரும்பலசாலி பீமன் இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தது என்னவோ கர்ணனைத்தான். பிறப்பிலிருந்து இறப்பு வரை தனது அங்கீகாரத்துக்கு ஏங்கும் கர்ணன், யார் எதைக் கேட்டாலும் வரம்பின்றி வாரிக் கொடுத்தவன். தானதர்மம் செய்வதில் கர்ணனுக்கு இணையானவர்கள் எவரும் இல்லை.
மகாபாரதத்தில் கர்ணன் தனது உயரிய குணங்களால் அனைவராலும் போற்றப்படுகிறான். பிறப்பால் பாண்டவர்களின் மூத்தவராக இருந்தாலும் விசுவாசத்தால் துரியோதனனை ஆதரித்தான். கர்ணன் மிகப்பெரிய வீரனாக இருந்தான். அவனுடன் ஒட்டிப்பிறந்த கவசமும் குண்டலமும் உயிரைப் பாதுகாக்கும் இயற்கை கேடயமாக இருந்ததால், யாராலும் அவனை வெல்ல முடியவில்லை. கவசம் பாதுகாப்பையும் குண்டலம் சக்தியையும் கர்ணனுக்கு அளித்துக் கொண்டிருந்தது.
கர்ணன் அர்ஜூனனை தனது எதிரியாக இந்த பிறவியில் மட்டும் நினைக்கவில்லை. முற்பிறவியில் கூட அவர்களது பகை இருந்தது. அது அடுத்த பிறவியிலும் தொடர்ந்தது. கர்ணன் தன் முற்பிறவியில் தம்போத்பவா என்ற அரக்கனாக இருந்தான்.
சூரியன் தனது பக்தனான தம்போத்பவாவுக்கு 100 கவசத்தையும் குண்டலத்தையும் கொடுத்தார். ஒரு கவசத்தை உடைக்க ஒருவர் 1000 ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும். அந்த கவசம் இருக்கும் வரை அசுரனை யாராலும் வெல்ல முடியாது.
அப்போது அர்ஜுனனும் கிருஷ்ணரும் நர நாராயணாக பிறந்து தம்போத்பவாவின் 99 கவசங்களை உடைத்தனர். கடைசி கவசம் இருக்கும் போது தம்போத்பவா சூரிய தேவனிடம் அடைக்கலமாகி உயிர் பிழைத்தார். இதனால் கோபமான நரன் அசுரனுக்கு சாபம் விட்டான். அதனால், இப்பிறவியில் நர நாராயணர்களால் அழியும் விதியை மாற்றியதால், அடுத்த பிறவியில் அவன் கர்ணனாக பிறந்தார். நர நாராயணர்கள் அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணராக அவதரித்தனர்.
சூரியனின் மகனாக பிறவி எடுத்த கர்ணன், பிறக்கும் போதே கவசமும் குண்டலத்தோடும் பிறந்தார். முந்தைய பிறவிப் பகையும் தொடர்ந்தது. கர்ணனின் கவசமும் குண்டலமும் யாராலும் உடைக்க முடியாத பாதுகாப்பு கேடயம், அது இருக்கும் வரை அவனை மரணம் நெருங்காது. எந்த ஒரு ஆயுதமும் அதன் முன்னர் செயலற்று போகும். எந்த கடவுளின் திவ்ய அஸ்திரமும் அவனுக்கு எதிராக செயல்படாது. குண்டலங்களில் எப்போதும் சூரிய தேவனின் ஆற்றல் இருக்கும் . அந்த குண்டலம் கர்ணனுக்கு தேவையாக சக்தியை கொடுக்கும். பாதுகாக்கும் கவசமும், சக்தி அளிக்கும் குண்டலங்களும் இருப்பது ஒருவரை எப்போதும் வீழ்த்த முடியாத மாவீரனாக வைத்திருக்கும். அது இருக்கும் வரை கர்ணனை யாராலும் வெல்ல முடியாது.
அர்ஜூனனின் வில்லும் அம்பும் கர்ணன் முன் தோற்றுப் போகும். கிருஷ்ணரின் விவேகமும் எடுபடாது. கர்ணனை அழிக்காமல் துரியோதனனை கொல்ல முடியாது. துரியோதனனை அழிக்கா விட்டால் பூலோகத்தில் தர்மத்தினை நிலை நாட்ட முடியாது. மகாபாரதத்தில் கர்ணன் தீயவர்கள் பக்கம் நிற்பான் என்பதை முதலில் உணர்ந்த கிருஷ்ணர், இந்திரனிடம் அவனது மகனான அர்ஜூனன் காக்கப்பட வேண்டும் என்றால், சூரிய புத்திரன் கர்ணனின் கவச குண்டலங்களை தானமாக பெற்று வருமாறு ஆலோசனை கூறினார்.
அதன்படி, இந்திரன் முனிவர் போல் மாறுவேடமிட்டு கர்ணனிடம் கவசத்தையும் , குண்டலங்களையும் தானமாக கேட்டார். எதையும் யோசிக்காமல் கர்ணன் உடனே தன் உடலில் ஒட்டியிருந்த கவசத்தையும் குண்டலங்களையும் அறுத்து எடுத்து தானமாக அளித்தான். கர்ணனின் தெய்வீக சக்திகள் அனைத்தும் அதோடு போய் விட்டன.