

பிருந்தாவனத்தில் நடந்த அதிசய நிகழ்ச்சியை பற்றி உங்களுக்கு யாராவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை என்றால் கேளுங்கள் சொல்கிறேன்.
கிருஷ்ணரின் பக்தாவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவை எல்லோருக்கும் தெரியும். அவர் ஒருசமயம் தென் இந்திய பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஸ்ரீரங்கம் சென்று சதூர்மாஸ்யம் என்று அழைக்கப்படும் நான்கு மாத விரதம் அனுஷ்டிக்க ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் ஒருவர் அகத்தில் தங்க நேர்ந்தது.
அந்த அர்ச்சகருக்கு கோபாலன் என்ற ஐந்து வயது குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு சைதன்ய மஹா பிரபுவின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவோரோடுதான் எப்போதும் இருக்கும். அவரோடுதான் பிரசாதம் சாப்பிடும். நான்கு மாதம் விரதம் முடிந்து மஹாப்ரபு ஸ்ரீ ரங்கத்தை விட்டு கிளம்பும் போது அதற்கு தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டது. தானும் சைதன்யா மஹாப்ரபுவுடன் பிருந்தாவனம் வருவேன் என்று அழுது அடம் பிடித்தது. ஐந்தே வயது குழந்தையை எப்படி கூட கூட்டி செல்வது?
நீ பெரியவன் ஆனதும் பிருந்தாவன் வந்து என்னோடு இருக்கலாம் என்று சமாதானம் செய்து ஆறுதல் கூறி கிளம்பி சென்றார் சைதன்ய மஹாப்ரபு.
அவர் சொன்னபடியே குழந்தை கோபாலனும் வளர்ந்து இளைஞனானதும் பிருந்தாவனம் சென்று சைதன்ய மஹாப்ரபுவுக்கு சிஷ்யராக ஆனார். பிறகு சைதன்ய மஹாப்ரபுவின் சிஷ்யர்களில் மிக முக்க்கியமான ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராக கோபாலபட்ட கோஸ்வாமி என்ற பெயருடன் திகழ்ந்தார். அப்போது அவர் பூஜித்தது ஒரு கிருஷ்ண சாலிக்ராம். பிருந்தாவனத்தில் எல்லா கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண விக்ரகங்களையே வழிபட்டனர்.
விக்கிரகங்களுக்கு அழகழகான ஆடைகள் அணிகலன்கள் அணிவித்து மகிழ்வதை பார்த்த கோபாலபட்ட கோஸ்வாமிக்கும் கிருஷ்ணருக்கு அலங்காரமும் அமுதும் செய்து ஆனந்தம் அடையவேண்டும் என்ற ஆதங்கம் ஏற்பட்டது. அப்படி நினைத்து அவர் உருகியதை அறிந்த கிருஷ்ணர் சாலிக்ராமாக இருந்தவர் ஒரு அழகிய கிருஷ்ண விக்கிரகமாக மாறி கோபாலபட்டர் தங்கி இருந்த குடிலுக்கு அருகில் உள்ள அரச மரத்தின் கீழ் கிடந்தார். அதை அறிந்து கோபாலபட்டர் அவ்விக்ரகத்தை எடுத்து வந்து கோவிலும் கட்டி ராதாரமண் என்று பெயர் இட்டு பிரதிஷ்ட்டை செய்தார். இன்றும் இந்த கோயில் பிருந்தாவனத்தில் உள்ள மிக பிரசித்தி பெற்ற புராதன ஏழு கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.
இன்றும் ஸ்ரீரங்கம் செல்பவர்கள் சைதன்யா மஹாப்ரபுவின் பாதங்களை கோபுரத்தின் முன் இருக்கும் ஒரு சிறிய சன்னதியில் காணலாம் தொட்டு வணங்கி கிருஷ்ண பக்தி பெறலாம்.