

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனன் மீதும் மற்ற பாண்டவர்களின் மீதும் அதீத அன்பு கொண்டிருந்தார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அந்த அன்பின் காரணமாகத்தான் பாண்டவர்கள் சார்பாக தூது சென்றார், அர்ஜூனனுக்கு சாரதியாகவும் இருந்தார். ஆனால், கௌரவர்கள் மீதும் கர்ணன் மீதும் கிருஷ்ணருக்கு அன்பு இல்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால், ஶ்ரீ கிருஷ்ணர் கர்ணன் மீதும் அன்பு கொண்டிருந்தார். முன்பே கர்ணன் தனது மைத்துனர் என்பதையும் அறிந்திருந்தார்.
கிருஷ்ணன் தனக்கு மிகவும் பிடித்தமான அர்ஜூனனிடம் அடிக்கடி கர்ணனின் பெருமைகளைப் பற்றி கூறிக்கொண்டே இருப்பார். மற்ற பாண்டவர்களிடம் கூட கர்ணனை விட்டுக்கொடுக்காமல் அவனது வீரம், கருணை, கொடை பற்றி புகழ்ந்து பேசுவார். கர்ணன் பல சமய சந்தர்ப்பங்களில் பாண்டவர்களுக்கு எதிராக நின்றபோது, ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணனை எதிர்க்காமல் எச்சரிக்கை மட்டுமே செய்தார். பல நேரங்களில் அவர் "நீ தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறாய்", கர்ணா! என்று அன்புடன் கூறியுள்ளார்.
மகாபாரத போர் இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில், கர்ணன் தன் தேர் சக்கரம் மண்ணில் புதைந்து கிடந்ததால், தனி ஒருவனாக அதை நகர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் கிருஷ்ணர் கர்ணன் மீது அம்பை ஏவுமாறு அர்ஜூனனை பணித்தார். அர்ஜூனனின் தொடர் அம்பு தாக்குதலில் கர்ணன் நிலைக் குலைந்து போனாலும், அவன் உயிர் மட்டும் போகவில்லை.
கர்ணன் செய்ய தர்மங்கள் அவனது உயிரை காத்து நின்றது. ஶ்ரீ கிருஷ்ணர் அந்தணர் வேடம் பூண்டு கர்ணனின் புண்ணியங்கள் அனைத்தையும் தானமாக பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் அர்ஜுனன் அம்பெய்த கர்ணன் உயிர் துறந்தான்.
கிருஷ்ணர் ஏன் கர்ணனை காப்பாற்றவில்லை?
கிருஷ்ணர் எவர் மீதும் உண்மையான பகையை கொண்டிருக்கவில்லை. அவர் கர்ணனை காப்பாற்ற எண்ணினார் , அதனால் அவனை சந்தித்து, அவன்தான் பாண்டவர்களின் உண்மையான மூத்த சகோதரன் என்ற உண்மையை கூறினார். அந்த உண்மையை வெளிப்படுத்தி பாண்டவர்களுடன் இணைந்து ராஜ்ஜியத்தை பெறுமாறு அறிவுரையும் கூறினார். ஆனால், கர்ணனோ "தன்னை நம்பித்தான் துரியன் இந்த போரில் இறங்குகிறான். அதனால், தன் பிறப்பு ரகசியத்தை எவரிடமும் கூற வேண்டாம்" என்று கிருஷ்ணரிடம் வேண்டிக்கொண்டான்.
ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணனை மட்டுமல்ல, துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்களையும் காப்பாற்ற எண்ணினார். போரினை முற்றிலும் தவிர்க்க பாண்டவர்களின் சார்பாக தூது சென்று, அவர்களின் உரிமையை நிலை நாட்ட குறைந்தபட்ச நிலங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் யோசனைகளை துரியோதனன் கேட்பதாக இல்லை.
விதி வலியது! கடவுளும் அதை தடுக்கவில்லை!
ஸ்ரீ கிருஷ்ணன் தர்மத்தின் பாதையை தேர்ந்தெடுக்கும்போது, கர்ணன் விசுவாசத்தின் காரணமாக அதர்மத்தின் பக்கம் நிற்க வேண்டிய இருந்தது. கர்ணனின் வாழ்க்கை முழுவதுமே விதி விளையாடிக் கொண்டிருந்தது. ஒருவரின் கர்மா செயல்பாட்டில் இருக்கும்போது அதை யாராலும் தடுக்க முடியாது. கர்ணன் போரின் முடிவையும் அறிந்திருந்தாலும் நல்ல நண்பனாகவே இருந்து எந்த முடிவையும் ஏற்க துணிந்தான்.
நல்லவனாக இருந்தாலும் கர்மாவை அனுபவிக்க வேண்டும்:
போர்க்களத்தில், கர்ணன் பெற்றிருந்த ஒவ்வொரு சாபமும் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தது. கர்ணன் முன்பு செய்த பல தவறுகள் அவனுக்கு எதிராக திரும்பி இருந்தன. அவை தங்கள் இறுதி கட்டத்தை அடையும் போது, கடவுளான கிருஷ்ணர் எதையும் தடுக்க விரும்பவில்லை.
பந்த பாசங்களை விட தர்மம் உயர்ந்தது:
அர்ஜுனன் போரிட மறுக்கும்போது "தர்மத்தினை பாதுகாக்கும் கடமையில் இருக்கும்போது பந்த பாசங்களுக்கு இடமளிக்கக் கூடாது". என்று அறிவுரை கூறியதே கிருஷ்ணர்தான், அதையே அவரும் கடைப்பிடித்தார் . இருபுறமும் போரிட்டு மடிந்தது அவருடைய உறவுகள் என்றாலும், விதியின்படி நடைபெற வேண்டிய எதையும் அவர் தடுக்கவில்லை. கர்மவினைகள்தான் இந்த உலகத்தை இயக்குகிறது. ஒருவரின் நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்பதான் கர்மா வேலை செய்கிறது. அதில் சலுகைகள் தருவது அதர்மம் தலை தூக்க வழி செய்துவிடும் என்பதை கிருஷ்ணர் அறிவார்.