

சரியான தீர்ப்பு:
நவகிரகங்களில் சனீஸ்வர பகவான் தனிச்சிறப்பு பெற்றவர். இவரை நியாயாதிபதி என்று கூறுவர். உடனுக்குடன் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு தீர்ப்பளிப்பவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் பிடிக்கிறார் என்றால் எல்லோருக்குமே கலக்கம்தான்.
ஆனால் ஒட்டுமொத்தமாக அப்படி பயப்பட வேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதிகமானோருக்கு ஏழரை சனியின் பிடியில் இருக்கும் போதுதான் குழந்தை பாக்கியம் வாய்க்கும். காரணம் சனியின் பிடியில் இருப்பவர்களை அவர் வருத்துவார் என்பதால் பிரசவ நேரத்தில் பெண்கள் உடலாலும் கொஞ்சம் வருத்தம் அடைவது சகஜம் என்பதால் அப்படி கூறுவது உண்டு. அவரவர் ஜாதகத்தில் சனிபகவான் எப்படி இருக்கிறார் என்பதை வைத்தே வம்ச விருத்தி மற்றும் ஆயுள் பற்றிய ஜாதகத்தை கூறிவிடுபவர் களும் உண்டு. சனி பகவானுக்கு ஆயுள் காரகன் என்ற பெயர் உண்டு.
அமைவிடம்:
தர்ம நியாயங்களையும் நீதியையும் சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்பளிக்கும் நீதி தேவன் இவர் என்றாலும், சனி பகவானின் எதிர்மறை பார்வை பெற்ற ஜாதர்களும், சனி பகவானுடைய சோதனையை தாங்க முடியாதவர்களும் வழிபட வேண்டிய தலம் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொழிச்சலூர் என்னும் ஊரில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயம்தான். இவரை முறைப்படி வழிபட்டு நம் தோஷங்களைப் போக்கிக்கொள்ளலாம்.
பெயர் காரணம்:
அகத்தியர் பொதிகை நோக்கி நதியோரமாக பயணப்பட்டபோது தர்ப்பை புற்களை நீரில் விட்டு விடுவார். எங்கெல்லாம் ஈர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவை கரை ஒதுங்கி அவ்விடங்களில் எல்லாம் சுயம்பு சிவலிங்கமோ அல்லது ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமோ தரிசனம் தரும். அப்படி இல்லாத இடங்களில் இவரே ஒரு லிங்கத்தை நிறுவிவிட்டு தன் தீர்த்த யாத்திரையை தொடர்வார். அப்படி அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் உள்ள ஒரு கோயில்தான் பொழிச்சலூரில் உள்ளது. இந்த ஊர் பூம்பொழிலோடு மலர்ந்திருந்ததால் பொழில்சேரூர் என்றும் வழங்கப்பட்டது என்று இதன் பெயர் காரண கதையை விவரிக்கின்றனர். தொண்டை நாட்டு நவக்கிரக தலங்களில் சனி பகவானுக்குரிய பரிகாரத்தலமாக இது விளங்குகிறது.
ஆதி சிவன் வழிபாடு:
இத்தலத்தில் வேளாளர் ஒருவர் விவசாயம் செய்தபோது ஏர்முனையில் ஒரு லிங்கம் தட்டுப்பட்டது. அச்சிவலிங்கத்தையே அங்கு நிறுவி வழிபட்டு வந்தார்கள். அகத்தியர் இத்தலத்தின் பெரும் சக்தியால் ஈர்க்கப்பட்டு சுயம்புவாய் நின்ற ஆதி சிவனை பூஜித்து சில காலம் இங்கேயே தங்கினார்.
தோஷ பரிகாரம்:
மூலவர் சன்னதி யானையின் பின்பக்கம் போன்ற தோற்றமுடைய து. கோவிலின் முகப்பு மண்டப வாயிலிலிருந்து நேராக நோக்கினால் பிரதானமாக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சற்று தள்ளி இடப்பக்கமாக ஆனந்தவல்லி தெற்கு புறம் நோக்கியும், தனித்தனி சன்னதிகளில் அருளாட்சி செய்கிறார்கள்.
இத்தலத்தின் பிரதானமே சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானே இங்குள்ள சிவனை பூஜித்து நள்ளார் தீர்த்தத்தில் நீராடியதால் தன் தோஷம் நீங்க பெற்று தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். எனவே இவ்வூர் வட திருநள்ளார் என்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சனி யன்றும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருநள்ளாருக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தோஷ பரிகாரம் செய்து மகிழ்வோடு திரும்புகின்றனர். இங்குள்ள தீர்த்தத்திற்கும் நள்ளார் தீர்த்தம் என்றே பெயர்.
ஆதலால் சனி பகவானின் பிடியில் இருப்பவர்கள் தயங்காமல் இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்தி அவன் அருள் பெற்று திரும்பலாம்.