

ஆயிரம் ஆண்டுகள் வரலாம், போகலாம். ஆனால், நமது மூதாதையர்கள் இந்த உலகில் விட்டுச்சென்ற கலைப்பொக்கிஷங்களின் மதிப்புக்கு அழிவே இல்லை. அதில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். உலகின் 100 அதிசயங்களில் இந்தியாவில் உள்ள 5 பழங்கால கட்டிடங்கள் இடம் பெற்றுள்ளது.அதில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
"திருக்காமக் கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்" இது யார் தெரியுமா? மதுரை மீனாட்சி அம்மனின் ஆரம்ப கால பெயர்தான். இது 13 ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் உருவான கோயில் இது அப்போது இந்த பெயர்தான் மீனாட்சியம்மனுக்கு.
1752 ம் ஆண்டிலிருந்துதான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனது. இதனை கட்டியவர் குலசேகர பாண்டியன். கல்வெட்டு கலாச்சாரம் தொடங்கும் முன்பே கட்டப்பட்ட கோயில் இது என்பதால் இந்த கோயில் கட்டப்பட்டது யார்? என்பது பற்றிய கல்வெட்டுகள் இல்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களில் மிக உயரமானது. 160 அடி உயரம்,108 அடி நீளம்.. 67 அடி அகலம் கொண்ட தெற்கு கோபுரம்தான். 1511 சுதைகள் கொண்ட இக்கோபுரத்தின் உச்சியில் இருபுறமும் உள்ள யாளியின் கண்களின் குறுக்களவு மட்டும் எவ்வளவு தெரியுமா? இரண்டரை அடி.
இக்கோபுரத்தை 9 நிலைகளும், 1447ம் ஆண்டு கட்டியவர் சிராமலை செவ்வந்தி மூர்த்தி என்பவர். இக்கோபுரத்தை கட்டிய பின், 80 ஆண்டுகளுக்கு வேறு எந்த கோபுரமும் கட்டப்படவில்லை. கும்பாபிஷேக பணிகள் முதலில் இங்கு தான் துவங்கும்.
மற்ற கோயிலில் இல்லாத ஒரு சிறப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டு. அது மீனாட்சி அம்மனுக்கு நடக்கும் ஐந்து கால பூஜைகள்.அப்போது காலையில் சின்னஞ்சிறு சிறுமியாக தோன்றும் அம்மன், உச்சி காலத்தில் மடிசார் புடவை கட்டியும்,மாலை நேரத்தில் வெள்ளிக் கவசமும்,வெள்ளிக் கீரிடம் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் காட்சி தருகிறார் . இது வேறு எந்த கோயிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
இன்று நேற்று அல்ல, கிபி 1700 ம் ஆண்டு தொடங்கி இன்று வரை தினமும் இரண்டு முறை மீனாட்சி அம்மன் கோயிலில் ஓர் இசைக் கருவி ஒலிக்கிறது .அது தான் "நகராமுரசு". மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்குக் கோபுரம் எதிரில் பிரத்யேகமாக இருக்கிறது நகரா மண்டபம்.தினமும் காலை 4.30 முதல் 5 மணிக்குள்ளும், மாலை 4 முதல் 4.30 மணிக்குள்ளும் இந்த நகரா முரசு ஒலிக்கும்.மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் ஏற்பாடு செய்ததுதான் இந்த நகரா முரசு. கோயில் நடை திறக்கப்படுவதை அறிவிக்க இந்த முரசு ஒலிக்கப் படுகிறது.
அனைத்து சாதியினரும் இந்துக் கோயில்களில் நுழையலாம் என்ற பூனா உடன்படிக்கை 1932 ம் ஆண்டு செப்டம்பர் 24 ம் தேதி கையெழுத்தானது. அதற்கான மாநாடு 1939 ம் ஆண்டு ஜூன் 11 ல் நடந்தது.
ஆனால், அதற்கு பிறகு தமிழகத்திலேயே முதல் முறையாக 1939 ம் ஆண்டு ஜூலை 8 ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதன் முதலாக ஹரிஜன மக்கள் ஆலயப் பிரவேசம் மேற்கொண்டார்கள். இதனை காந்திஜியும் வரவேற்றார். அதன் பின்னர்தான் எல்லா இன மக்களும் ஆலய பிரவேசம் செய்யலாம் என்ற சட்டம் 1939 ஜூலை 17 அமலுக்கு வந்தது.
மதுரையில் மீனாட்சி ஆட்சி என்பதற்கு சான்றாக சுவாமி சன்னதி உட்புறமாகவும், அம்மன் சன்னதி வெளிப்புறமாகவும் இருக்கும். மீனாட்சி அம்மன் கோயிலை மையமாகக்கொண்டு இருக்கும் கிழக்கில் முத்தீஸ்வரர் கோயிலும், தெற்கில் தென் திரு ஆலவாய் சுவாமி கோயிலும், மேற்கில் இம்மையில் நன்மை தருவார் கோயிலும், வடக்கில் திருவாப்புடையார் கோயிலும் உள்ளது.
இந்த பழமையான கோயில்களிலும் சுவாமி சன்னதி உட்புறமாகவும், அம்மன் சன்னதி வெளிப்புறமாகவும் இருப்பதைக் காணலாம். இதற்கு அம்மனுக்கு கட்டுப்பட்ட சுவாமியாக சிவன் இருப்பதாக ஐதீகம். மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மாதத்தில் சுந்தரேசுவரருக்கும் , சித்திரையில் மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும்.
மதுரை கலெக்டராக 1812-1828 வரை இருந்தவர் ரெளஸ் பீட்டர். இவரை ஒருமுறை மீனாட்சி அம்மன் சிறுமி வடிவில் வந்து அவர் உயிரை காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக அம்மனுக்கு தங்கத்தால் ஆன காலணிகளை பரிசாக அளித்தார் பீட்டர். அவற்றில் பீட்டர் என்ற தன் பெயரையும் பொறித்திருந்தார். இன்றும் சித்திரை உற்சவ நாளில் மீனாட்சி அம்மனின் பாதங்களில் இந்த காலணிகள் அணிவிக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மனின் சிறப்பே மாணிக்க மூக்குத்தி தரிசனம் தான்.தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு,தை அமாவாசை ஆகிய நாட்களில் இந்த தரிசனத்தை காணலாம். ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெருமானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதிஉலாக் களில் மொத்தம் 16 முறை மட்டுமே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறார். அந்த வகையில் சித்திரைத் திருவிழாவின் 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு அதிசயம். அங்குள்ள ஆயிரங்கால் மண்டபம். ஆனால், இங்கு இருப்பதோ 985 தூண்கள் மட்டுமே. இந்த மண்டபத்தின் தூண்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும்படி அமைக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பு ஆயிரங்கால் மண்டபம் ஒரு ஒலியியல் அதிசயம். கோயில் முழுவதுமே மிகுந்த ஜன சந்தடியுடன் இருந்தாலும் கூட இந்த மண்டலத்தில் எப்போதும் அமைதியே நிலவுகிறது.