
நட்சத்திரங்கள் இருபத்தியேழில் இரண்டாவது நட்சத்திரம்தான் பரணி. பொதுவாகவே, பரணி நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. 'பரணியில் பிறந்தால் தரணி ஆள்வான்’ என்று இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சிறப்பித்துச் சொல்வார்கள். மாதந்தோறும் பரணி நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திரத்தை மட்டும்தான் மஹாபரணி என்று சிறப்பித்துச் சொகிறார்கள். கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். அதாவது, இறைவனை ஜோதி வடிவமாக தரிசிப்பது என்பது இதன் ஐதீகம். பிறகு, புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மஹாபரணி என்று போற்றுகிறார்கள். அன்று பித்ருக்களுக்குக் கொடுக்கப்படும் சிராத்தத்தை மஹாபரணி சிராத்தம் என்று சொல்வதுண்டு. இது முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுக்க மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.
நம் நாட்டில் பித்ரு காரியங்கள் செய்ய மிகவும் முக்கியமான புண்ணியத் தலங்களாகக் கருதப்படுபவை காசியும் கயாவும்தான். இந்தப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று சிராத்தம் கொடுத்த பலனை தரக்கூடியது மஹாபரணி சிராத்தம். மஹாபரணி சிராத்தத்தின் சிறப்புகள் பற்றி மச்ச புராணம், அக்னி புராணம், கருட புராணம் போன்றவற்றில் சிறப்பித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
பரணி நட்சத்திரம் என்பது யமதர்மராஜனின் நட்சத்திரம் ஆகும். யமதர்மராஜனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் நம் முன்னோர்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், யமதர்மராஜன்தான் நம் முன்னோர்களை மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களும் பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார் என்பது ஐதீகம். அதனால், அவருக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் தவறாமல் தர்ப்பணம் செய்வது யமதர்மராஜனை மிகவும் மகிழ்வித்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனைகளை குறைத்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்று கூறப்படுகிறது.
தந்தை, தாய் இறந்த திதி தெரியாதவர்கள் கூட இந்த மஹாபரணி நாளில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சிராத்தங்களை செய்து பித்ருகடனை தீர்க்கலாம். தவிரவும், ஏதாவது காரணத்தினால் தந்தை, தாய்க்கு செய்ய வேண்டிய வருடாந்திர திவசம் விட்டுப்போனால், அதையும் கூட இந்த மஹாபரணி நாளில் செய்யலாம். முக்கியமாக, மஹாபரணி அன்று கொடுக்கும் தர்ப்பணத்தால் குடும்பத்தில் துர்மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைவதால், பித்ரு தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.
மஹாபரணி நாளில் வீட்டில் உயரமான பகுதியில் யமதீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் புண்ணியப் பலன்களைக் கொடுக்கும். இது நம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், நமக்கும் நம் அந்திம காலம் வரை மரண பயம் இல்லாமல் இருக்கும்.
யம தீபத்தை நம் வீட்டு மாடியில் ஒரு அகல் விளக்கில் முடிந்தால் தாமரைத் தண்டால் ஆன திரியிட்டு ஏற்றி வைக்கலாம். வசதியில்லாதவர்கள் அவர்கள் வீட்டு பூஜையறையிலேயே தனியாக ஒரு அகல் விளக்கை ஏற்றலாம். இதனால் யமதர்மராஜன் மிக்க மகிழ்ச்சியடைவார். குடும்பத்தில் துர்மரணம் சம்பவிக்காது. யாருக்கும் மரண பயம் ஏற்படாது. அனைவரும் நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வர். மஹாபரணி அன்று செய்யும் தானம், தர்மங்களும் மிகுந்த நற்பலனைக் கொடுக்கும்.
யம தீபம் ஏற்றும்போது கூற வேண்டிய ஸ்லோகம்:
‘ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:’
ஆகவே, இந்த வருட மகாளயபட்சத்தில் வரும் மஹாபரணி தினமான நாளைய தினத்தில் (12.09.2025) தந்தையில்லாதவர்கள் அனைவரும் கட்டாயம் தர்ப்பணம் செய்து, வீட்டு மாடியில் யம தீபம் ஏற்றி வழிபட்டு எல்லா நன்மைகளையும் அடையலாம்.