
‘சுதர்ஷன்’ என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம். சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். இதை மகாவிஷ்ணு, தனது ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்து கொண்டே இருப்பது என்று பொருள்.
மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. இது எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக்கூடியது சுதர்சன சக்கரம். அது சுழலும் தருணத்தில் சப்தங்கள் எழுப்புவதில்லை என்பது ஐதீகம்.
சுதர்சன சக்கரம் ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக் கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்ததுமாக இருக்கிறது. யார் மீதாவது இதை ஏவும்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் தனது ஆள்காட்டி விரலில் இருந்துதான் இதை ஏவுகிறார்.
எதிரிகளையும், அசுரக் கூட்டத்தையும் அழித்த பின்னர், சுதர்சன சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்து விடுகிறது. அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரது திருக்கரங்களுக்கே வந்து விடுகிறது.
எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப் பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண் மூடி திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். மேலும், மகாவிஷ்ணுவின்திருக்கரத்திலிருந்து சுதர்சன சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது. மீண்டும் அவரது திருக்கரங்களுக்கே வந்து விரலில் அமர்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.
ஒருவேளை, எதிரி மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சன சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால் அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை 'ரன்ஸகதி' என்பர். சுதர்சன சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார்.
மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ, அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நமது எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள்.
ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாத்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.