பெண்களின் சபரிமலை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை மகிமைகள்!

15 அடி உயர வளர்ந்து வரும் புற்றில் அருள்பாலிக்கும் விழி மூடா தேவியின் அற்புத திருத்தல வரலாறு.
பகவதி அம்மன் - Mandaikadu Temple
பகவதி அம்மன் - Mandaikadu Temple
Updated on

கன்னியாகுமரி மாவட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுயம்புவாக தோன்றிய 15 அடி உயர ஐந்து தலை புற்று வடிவ அம்மனால் பிரசித்தி. ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும் இங்கு பெண்கள் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி வழிபடுகின்றனர். மாசி மாத 10 நாள் கொடை விழா, நள்ளிரவு ஒடுக்கு பூஜை, அமைதியில் நடைபெறும் ஊர்வலம் ஆகியவை கோவிலின் தனிச்சிறப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சலுக்கு தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது மண்டைக்காடு கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுயம்புவாகத் தோன்றிய புற்று வடிவிலான அம்மனுக்கு பெயர் பெற்றது.

புற்றுக்கு நடக்கும் விசேஷ வழிபாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

மூலவரான பகவதி அம்மன் சுமார் 15 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான புற்று வடிவில் ஐந்து தலைகளுடன் காட்சியளிக்கிறார். இந்தப் புற்று நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இவ்வளவு பிரம்மாண்டமான இந்தப் புற்றுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

புற்றின் மேற்பகுதியில் அம்மனின் திருமுகம் உள்ளது. இக்கோவில் 'பெண்களின் சபரிமலை' என்று அழைக்கப்படுகிறது. சபரிமலைக்குச் செல்வது போலவே பெண்கள் இருமுடி கட்டிக் கொண்டு வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

விழி மூடாத பகவதி:

பிரம்மாண்டமான புற்றில் சந்தன முகத்துடன் காட்சி தரும் பகவதி அம்மனுக்கு முன்பாக வெண்கலச் சிலையில் நின்ற கோலத்திலும், மற்றொரு வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும் இங்கு அம்மன் காட்சி தருகிறாள். "விழி மூடாத பகவதி" என்று இந்த அம்மனை அழைக்கிறார்கள். தீயவர்களை அழிப்பதற்கும் நல்லவர்களை காப்பதற்கும் எப்போதும் விழித்திருப்பவள் என்பதால் இந்தப் பெயரில் இவளை அழைக்கிறார்கள். ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இங்கு அமைத்த ஸ்ரீ சக்கரமும் அம்மனின் வடிவமாக இருந்து பக்தர்களைக் காத்து வருகின்றது.

இதையும் படியுங்கள்:
எரியும் தீயில் குளியல்! பொய் சொன்னால் தண்டிக்கும் மரம்! அம்மன் கோயில்களின் அமானுஷ்ய ரகசியங்கள்!
பகவதி அம்மன் - Mandaikadu Temple

ஆடி மாதத்தில் இங்கு பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். அம்மன் உறையும் வேப்ப மரமே இங்கு தலவிருட்சமாக உள்ளது.

மாசிக் கொடை விழா:

தமிழ் மாதமான மாசி மாதம் (மார்ச்) நடைபெறும் 10 நாட்கள் கொடை விழா இக்கோவிலின் மிக முக்கியமான விழாவாகும். அப்போது பக்தர்கள் புற்றுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆலயத்தைச் சுற்றி பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மாசி கொடை விழாவின் நிறைவு நாளன்று நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடைபெறும். இது பகவதி அம்மனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியாகும்.

இந்த ஒடுக்கு பூஜைக்காக பகவதி கோயிலுக்கு அருகே உள்ள சாஸ்தா கோவிலில் உணவுகளைத் தயாரித்து நீளமான வெள்ளைத் துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அப்பொழுது லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்தாலும் ஒரு சின்ன சத்தம் கூட கேட்காது என்பதுதான் மிகவும் சிறப்பு. அம்மனுக்குப் படையல் போடும்போது எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதே இதன் ஐதீகமாக கூறப்படுகிறது.

பகவதி அம்மன் - Mandaikadu Temple
பகவதி அம்மன் - Mandaikadu TempleAI Image

பெண்களின் சபரிமலை:

இந்த விழாவைக் காண்பதற்காக சபரிமலைக்கு விரதம் இருந்து ஆண் பக்தர்கள் செல்வதைப்போல பெண் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வருகிறார்கள். மாசி மாத விழாவைப்போல ஆவணி மாத அஸ்வதி பொங்கல் விழாவும் இங்கு சிறப்பானது. ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் இங்கு விசேஷ வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.

இங்கு வந்து மண்சோறு உண்டு வேண்டிக் கொள்ள பிள்ளை வரம் கிடைக்கும் என்றும், தாலி காணிக்கை செலுத்தினால் திருமண வரம் கிட்டும் என்பதும் மக்களிடையே உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

பாயசம் மற்றும் மண்டையப்பம்:

கரும்பு சர்க்கரை பாயசம் மற்றும் 'மண்டைக்காடு மண்டையப்பம்' ஆகியவை அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பிரசாதங்களாகும். இக்கோயின் பிரசாதமான மண்டையப்பமும், பக்தர்கள் வேண்டிக்கொண்டு செய்யும் முத்தப்பமும் மிகவும் சுவையானது.

இதையும் படியுங்கள்:
பல்லசேனா மீன் குளத்தி பகவதி அம்மன் அதிசய கதை: ஒரு குடையில் இருந்து பிறந்த கோவில்!
பகவதி அம்மன் - Mandaikadu Temple

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், திருமணத் தடைகள் நீங்கி, குழந்தை வரம் அருளும் மண்டைக்காடு பகவதி அம்மனின் 41 நாள் விரத முறைகளையும், மாசிக் கொடை விழாவின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக அறிந்துகொண்டு, உங்கள் பிரார்த்தனைகளைச் சரியான முறையில் சமர்ப்பித்து அம்மனின் முழுமையான அருளைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com