மண் சட்டி நைவேத்திய மகிமை: திருப்பதி பெருமாள் கோயில் ரகசியம்!

Tirupati Perumal
Tirupati Perumal
Published on

பெருமாள் கோயில்களில் புகழ் பெற்றது திருப்பதி வேங்கடாஜலபதி திருக்கோயில். இத்தலத்தின் அருகில் பீமன் என்ற குயவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் மிகச் சிறந்த பெருமாள் பக்தர். இவர் ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தனது தொழிலிலேயே மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போய் பெருமாளை தரிசிக்க அவருக்கு நேரமே இருக்காது. அப்படியே கோயிலுக்குப் போனாலும் பெருமாளை எப்படி வழிபடுவது என்று அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே நீயே எல்லாம்’என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு திரும்பி வந்து விடுவார்.

ஒரு சமயம் அவருக்கு மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதோடு அவர் அன்று பெருமாளை தரிசிக்கவும் கோயிலுக்குப் போக நேரமில்லை. ‘பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?’ என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீந்து விடும் களிமண்ணை கொண்டு சிறு சிறு பூக்களாக செய்து அதை நூலில் கோர்த்து பெருமாளின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி பண்டிகை: ஒன்பது நாட்களில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒன்பது சக்தி வாய்ந்த மந்திரங்கள்!
Tirupati Perumal

அதே ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் மிகச் சிறந்த பெருமாள் பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப் பூ மாலை ஒன்றை அணிவித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் இப்படி அணிவித்து விட்டு மறு வாரம் ஆலயத்துக்கு வந்து பார்த்தபோது பெருமாளின் கழுத்தில் களிமண் பூ மாலை கிடந்தது.

கோயில் பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரசரும் அரண்மனை திரும்பினார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள் குயவர் பீமன் தம் மீது கொண்ட தீராத பக்தியைப் பற்றிச் சொன்னார்.

இதையும் படியுங்கள்:
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாதா? ஏன்?
Tirupati Perumal

அதைத் தொடர்ந்து, மறுநாள் அந்தக் குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருள் உதவி செய்தார். அப்பொருட்களைக் கண்டு மனம் மயங்காமல் தொடர்ந்து பெருமாள் பணியையே செய்து வந்த குயவர், தனது இறுதிக் காலத்தில் வைகுந்த பதவி அடைந்தார்.

பெருமாளின் ஆணைப்படி அந்த பக்தரை கௌரவிக்கும் வகையில் இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் தயிர் சாத நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாத திருவோண நட்சத்திர தினம் திருப்பதி மலையைப்ப ஸ்வாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன் காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை  வணங்குவது மரபாகி விட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com