மீசையுடன் காட்சி தரும் ராமர்! ஹைதராபாத்தின் 800 ஆண்டு கால 'மீசல ராமுடு' ரகசியம்!

meesala-ramudu-temple
meesala-ramudu-temple
Published on

ஹைதராபாத்தில் ராமபிரானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோயில்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் தமக்கெனத் தனித்துவமான வரலாற்றையும் பக்தி மரபுகளையும் கொண்டவை.

அவைகளில் ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் (Langar House) என்ற இடத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான மீசல ராமுடு கோயில் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். இக்கோயிலில் உள்ள ராமர் மீசையுடன் காட்சி தருகிறார். பொதுவாக ராமர் மீசை இல்லாமல் சாந்தமாக காட்சியளிப்பார். ஆனால் இங்குள்ள ராமர் சிலைக்கு மீசை இருப்பது தனி சிறப்பாகும். இது ஹைதராபாத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும், சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.

புகழ்பெற்ற பக்தரான  ராமதாசர் பத்ராசலம் கோயிலைக் கட்டுவதற்கு முன்பே இங்கு வந்து வழிபட்டதாகக் கருதப்படுகிறது. மன்னர் தானா ஷாவின் காலத்தில் பக்த ராமதாசு இங்கு வசித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ராமதாசு மக்களிடமிருந்து வசூலித்த வரிகளைப் பயன்படுத்தி பத்ராசலம் கோயிலைக் கட்டினார், வரிப்பணத்தை பயன்படுத்தியதற்கு தண்டனையாக அப்போதிருந்த சுல்தான்  மன்னரால் அவர் கோல்கொண்டா கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சுல்தானின் கனவில் ராமரும் லட்சுமணனும் தோன்றி, தங்கம் மற்றும் வைரங்களைக் கொடுத்து கடனைத் திருப்பிச் செலுத்தி, ராமதாசுவை விடுவித்தனர். ஆனால், தனது கடனைத் திருப்பிச் செலுத்தியவர் யார் என்று பார்க்கும் வரை அங்கிருந்து செல்ல ராமதாசு மறுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணிடாதீங்க! வரவிருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?
meesala-ramudu-temple

ராமர் தாமே மீசையுடன் இளமையான தோற்றத்தில் தோன்றி, ராமதாசுவை விடுவித்து, இப்போதுள்ள இந்த கோயில் இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இதனால்தான், வெள்ளி மீசையுடன் காணப்படும் இந்தத் தெய்வம் "மீசல ராமுடு" என்றும் பிரபலமாக அறியப்படுகிறது.

பக்த ராமதாஸ் கடனை ராமர் பெருமானே தீர்த்ததால், இந்த இடம் கர்ஜா முக்த் மந்திர் (கடன் இல்லாத கோயில்) என்று அழைக்கப்படுகிறது. கடன் அல்லது நிதிச் சிக்கல்களால் அவதிப்படும் எவரும் இங்கு வந்து, நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் ராமபிரான் தனது பக்தர்களின் பிரார்த்தனைகளைக் கேட்டு, அவர்களின் சுமைகள் நீங்க உதவுகிறார் என்றும் கூறப்படுகிறது.

இக்கோயிலின் மற்றொரு வியக்கத்தக்க அம்சம், ராமாயண இதிகாசத்தில் விவரிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பாலமான ராம் சேதுவிலிருந்து வந்ததாக நம்பப்படும் மிதக்கும் கல்லாகும். கோயில் அதிகாரிகளின் கூற்றுப்படி, முற்காலத்தில் பூசாரிகள் ராமேஸ்வரத்திற்குச் சென்று, நுண்துளைகள் கொண்ட அந்தக் கல்லைக் கோயிலுக்குக் கொண்டு வந்து, அங்கு அதை ஒரு புனிதப் பொருளாகப் பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலின் உள்ளே உள்ள நீர் தொட்டியில் அந்தக் கல் மிதப்பதை பக்தர்கள் காணலாம்.

இதையும் படியுங்கள்:
திருவாரூர் ஆழித்தேர்: ஆன்மீக அறிவியலும் அஜபா ரகசியமும்!
meesala-ramudu-temple

இக்கோயிலில் ராம நவமி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா ஒன்பது நாள் கொண்டாட்டமாக பிரம்மோற்சவத்துடன் தொடங்கும். இந்த நாட்களில், பத்ராசலம் கோயிலில் செய்வது போலவே அதே பாரம்பரிய முறையில் பகவானுக்கு சிறப்புச் சடங்குகளும் வழிபாடுகளும் செய்யப் படுகின்றன.

இக்கோயிலில் 132 அடி நீளம், 45 அடி அகலம் மற்றும் 30 அடி தடிமன் கொண்டதாக, அனுமனின் பஞ்சமுகி (ஐந்துமுக) வடிவத்தில் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட. உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேய சுவாமி சிலையை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com