

திருவாரூர் தியாகராஜர் கோயில் அங்கு அமைந்துள்ள மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதுமான கோயில் ஆகும். திருவாரூருக்கு 'திருவாரூரில் பிறந்தால் முக்தி ', 'திருவாரூர் தேர் அழகு ' என்று பல பெருமைகள் உண்டு. இவற்றை விட இன்னொரு பெருமையும் உண்டு. அதுதான் சகல சிவாலயங்களின் சாந்நித்யமும் பிரதோஷ பூஜையில் இங்கு ஓடுங்குவதாக ஐதீகம். மகாவிஷ்ணு தியாகராஜரைத் தன்னுடைய இதயமாகிய தாமரையில் வைத்து பூஜித்தார்.
எனவே தியாகேசர் கோயிலைக் 'கமலாலயம்' என்றும் அழைக்கின்றனர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது மத்தளத்தை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு வசிப்பது வழக்கம் இங்கு மட்டுமே உள்ளது. இதை 'பூத நிருத்தம் ' என்கிறார்கள்.
தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். சிதம்பரம் ரகசியம் என்பது போல் திருவாரூர் ரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோம குல ரகசியம் என்பார்கள். தியாகராஜரின் திருமார்பை ஸ்ரீ சக்கரம் அலங்கரிப்பதால், அவரது முழு திருமேனியை யாராலும் எப்போதும் காண முடியாது.
எனவே நம்மால் அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள தேவியின் திருமுகத்தையும் மட்டுமே காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.
எந்த ஒரு சிவதலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இது ஒன்றே ஆகும். இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர்என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இங்கு தியாகராஜருக்கு ஒவ்வொரு நாளும் இரவு அர்த்த ஜாம பூஜையின் போது நெய்யில் முறுக்கு செய்து நிவேதனம் செய்கிறார்கள்.
திருவாரூர் தேர் திருவிழா தொன்மையான வரலாற்றைக் கொண்டது.'திருவாரூர் தியாகராஜர் சுவாமி பங்குனி ரதோத்ஸவம் மாசி மாதம் 8 தொடங்கி சித்திரை இரண்டாம் தேதி வரை 55 நாட்கள் நடைபெற்றதாக " வரலாற்று குறிப்புகள் உள்ளன.தற்போது பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள தேர்களில் மிகப்பெரிய தேர் ஆரூர் ஆழித்தேர் தான் ஆரூர் மரத் தேரின் உயரம் 30 அடி, உச்சியில் உள்ள விமானம் வரை உள்ள தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, சிகரம் 12 அடி ,தேர்க்கலசம் 6 அடி உயரமாகும்.தேரின் மொத்த உயரம் 96 அடியாகும்.மரத்தேரின் எடை மற்றும் இரும்பு சக்கரங்கள் உட்பட தேரின் எடை 220 டன்கள்.இதன் மீது 5 டன் எடையுள்ள பனைமரக்கட்டைகளும் ,50 டன் எடையுள்ள மூங்கில்களும்,10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும், ஒரு டன் எடையுள்ள கயிறு,அரை டன் எடையுள்ள வண்ணத்துணிகளும் தேரில் பயன்படுத்தப்படுகின்றன.
தேரின் முன்புறம் உள்ள குதிரைகள்,யாளி, பிரம்மன் பொம்மைகள் மற்றும் அழகிய சிற்பங்கள், வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேர் அலங்கரிக்கப்படும். இவற்றின் எடை சுமார் 5 டன்களாகும். இப்படியாக நகர் வலம் வரும் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். திருவாரூர் ஆழித்தேரின் கலசத்தில் இரண்டு வெள்ளி குடைகள் அமைக்கப் பட்டிருக்கும். தேர் கலசத்தில் வெள்ளி குடை இருப்பதை திருவாரூரை தவிர வேறு எங்கும் காணமுடியாது.
ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த தேரில் 64 தூண்களும், நான்கு குதிரைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த 64 தூண்களும் 64 கலைகளையும், நான்கு குதிரைகள் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. சிம்மாசன பீடம் என ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்த தேரின் நான்காவது அடுக்கில் தியாகராஜர் வீற்றிருப்பார்.தேரை இழுப்பதற்கு 4 பெரிய வடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இழுக்க பயன்படுத்தப்படும் ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது.