

தமிழ் கடவுளாக முருகனுக்கு கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற நாட்கள் விரதம் இருக்க உகந்த நாட்களாகும். அந்த வகையில் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பிறகு தொடங்கி சஷ்டி திதி வரை 48 நாட்கள் கடைபிடிக்கப்படும் கந்த சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்த சஷ்டி விரதம் பக்தர்களால் 6 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆறு நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து முருகன் கோவிலுக்கு சென்று பூஜை மற்றும் வழிபாடுகள் செய்வது முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி கவசம், கந்த புராணம், திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாராயணம் செய்வார்கள். விரத நாட்களில் தீய செயல்களைத் தவிர்த்து, மனதையும், உடலையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.
கந்த சஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும், முருகனின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைபிடிப்பது வழக்கம். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 22-ம்தேதி புதன் கிழமை தொடங்கியது.
இதற்காக முருக பக்தர்கள் கடந்த 6 நாட்களாக கடுமையாக சஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். 6 நாள் விரதம் பின்பற்ற முடியாதவர்கள் சூரசம்ஹாரம் நாளான இன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி அளவில் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், திருப்போரூர் சுப்ரமணிய சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்களில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடக்கும் சூரசம்ஹாரம் புகழ் பெற்றது. இன்று மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இப்போதே கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில் ஒரு முருகன் கோவிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முருகனின் அறுபடை வீடுகளும் பக்தர்களை காப்பதற்காக அமைந்த தலங்களாகும். அந்த வகையில் முருகனின் ஆறு படைவீடுகளும் மனித உடலில் உள்ள 6 ஆதாரங்களை விளக்கும் இடங்களாகும். அதனாலேயே இந்த 6 தலங்கள் மட்டும் ஆறுபடை வீடுகள் என சிறப்பித்து கூறப்படுகின்றன.
திருப்பரங்குன்றம் முதலாம் படைவீடாகவும், திருச்செந்தூர் இரண்டாம் படைவீடாகவும், பழனி மூன்றாம் படைவீடாகவும், சுவாமிமலை நான்காம் படைவீடாகவும், திருத்தணி ஐந்தாம் படைவீடாகவும், பழமுதிர்ச்சோலை ஆறாம் படைவீடாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வளவு சிறப்புகள் பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடத்தப்படுவதில்லை.
அப்படிப்பட்ட முருகனின் படைவீடு தான் திருத்தணி. இக்கோவில் முருகனின் 5-ம் படை வீடாகும். சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி கோவிலாகும். தணிகை என்பதன் பொருளே சினம் தணிதல் தான், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். இதன் காரணமாக, இக்கோவிலில் மட்டும் ‘சூரசம்ஹாரம்’ திருவிழா நடைபெறுவது இல்லை. அதற்கு மாறாக இன்று உற்சவர் சண்முக பெருமானின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.