
நம் இந்து மதத்தில் ஒவ்வொரு விரதங்களும், பண்டிகைகளும் வாழ்வின் நியதிகள் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு பெண்ணுக்கு இறுதி வரை துணையாக வரும் கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், சந்ததிகள், குழந்தையின் பெயர் வேண்டியும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கவும் பெண்கள் கடைபிடிக்கும் விரதமாக இந்த வரலட்சுமி விரதம் அமைகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. செல்வத்தை வாரி வழங்கும் மகாலச்சுமி தனம், தான்யம், வீரம், ஜெயம், சந்தானம், கல்வி, பதவி என அனைத்து செல்வங்களையும் நமக்கு அருள்கிறாள். இப்படி அஷ்ட செல்வங்களையும் நமக்கு வரமாக தந்து மகிழ்வதாலேயே வரலச்சுமி எனவும் நம்மால் வணங்கப்படுகிறாள்.
வரலெட்சுமி விரதம் பற்றிய பல புராணக்கதைகள் புனைவுகளாக உண்டு. அதன்படி அன்னை பார்வதிதேவி சிவபெருமானின் கட்டளைப்படி விரதமிருந்து மகாலச்சுமியை வணங்கிய நாள் என்றும், விசுவாசியாகிய சாருமதி எனும் பக்தையின் கனவில் சென்று இந்த விரதம் பற்றியும் அதன் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறி அவள் மட்டுமல்லாது உலகத்தார் அனைவரும் பலன் பெற வேண்டும் எனும் அன்னையின் விருப்பம் நிறைவேறியது எனவும்.
வயதான சுமங்கலி வேடத்தில் யாசகம் கேட்டு தேடி வந்த மகாலட்சுமியை ஒரே ஆசை மகளை திருமணம் செய்து கொடுத்த வருத்தத்தில் இருந்த கர சந்திரிகா என்னும் ராணி அவமானப்படுத்தியதன் பலனாக தங்கள் செல்வங்களை எல்லாம் இழந்து பின் தங்கள் மகளான சியாம பாலாவின் ஆலோசனையின் பேரில் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்து இழந்த அனைத்து செல்வங்களையும் பெற்றதாகவும் பல்வேறு கதைகள் உள்ளது.
கதைகள் பலவாறாயினும் மாங்கல்ய செல்வம் மற்றும் பொருள் செல்வம் வேண்டிப் பெறுவது மட்டுமே இந்த விரதத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது. வருடம் ஒருமுறை ஆடி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிகிழமை அன்று இந்த விரதம் கடைப்பிடிக்க சுமங்கலிப் பெண்கள் முதல் நாளில் இருந்தே லட்சுமியை தங்கள் வீடுகளில் அழைத்து வரவேற்கத் தயாராகின்றனர்.
விரத நாளில் பகல் முழுவதும் விரதம் இருந்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையை அலங்கரிக்கின்றனர். வீட்டின் நடுவிலோ பூஜையறையிலோ சுத்தம் செய்யபட்டு கோலம் இட்ட மேடையில் புனிதநீர் அல்லது பச்சரிசி நிறைந்த கலசம் வைத்து அதன்மேல் மாவிலை, சந்தனம், மலர்களால் அலங்கரித்து தேங்காயை வைக்க வேண்டும்.
அதன் முன் அவரவர் வசதிக்கேற்ப லச்சுமியின் படமோ அல்லது தற்போது கடைகளில் ரெடிமேட் ஆக விற்கப்படும் உலோக அச்சினால் வார்க்கப்பட்ட திருமுகத்தையோ உருவாக்கி அந்தக் கலசத்தையே வரலட்சுமியாக ஆவாகனம் செய்ய வேண்டும்.
கலசத்தின் மேல் திரிக்கப்பட்ட மஞ்சள் கயிறுகளை வைத்து பூக்கள் கொண்டு லட்சுமி நாமங்கள் சொல்லி பூஜை செய்து. வீட்டில் செய்யப்பட்ட பட்சணங்களையும், பாயாசம் போன்ற உணவுகளை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தீபம் தூபம் காண்பித்த பின் வீட்டில் உள்ள பெண்கள் மஞ்சள் கயிறை எடுத்து அணிந்து கொள்ளலாம்.
அன்றைய தினம் அக்கம் பக்கம் உள்ள பெண்களையும் அழைத்து இந்த விரதத்தில் பங்குபெற செய்து அவர்களுக்கும் பிரசாதங்கள் அளித்தால் லட்சுமியின் மனம் குளிர்ந்து நன்மைகள் பெருகும். அத்துடன் தங்களால் முடிந்த உணவு, உடை தானங்களையும் வழங்குவது சிறப்பு.
சகலவிதமான செல்வங்களையும் அளித்து அருள்புரியும் அன்னை வரலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்று ஆராதனைகள் செய்து வழிபடுவதே வரலட்சுமி நோன்பின் மகத்துவம். நம் ஆராதனைகளால் மகிழும் அன்னை நமக்கு வேண்டிய வரங்களை தருவாள் என்பது உறுதி.
கணவர் நீண்ட ஆயுள் பெறவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு தகுந்த வரன் அமையவும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற மேற்கொள்ளப்படும் வரலட்சுமி விரதம் நாம் வழிபடவேண்டிய முக்கிய விரதம் என்பதில் சந்தேகமில்லை.