நரகத்தையும் சொர்க்கமாக மாற்றிய ஒரு துளி திருநீறு!

Thiruneetrin Perumai
Thiruneetrin Perumai
Published on

புராண காலத்தில் ஒரு சமயம் துர்வாச முனிவர் தனது காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து, பித்ரு லோகத்தை நோக்கிப் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தமாக அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.

‘இவ்வளவு பெரிய கிணறை இத்தனை நாள் நாம் பார்த்ததே இல்லையே’ என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதைபட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்வின் நோக்கம் கூறும் ஸ்ரீஅன்னை!
Thiruneetrin Perumai

துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த அந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நிகழ்ந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. அந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள்.

திடீரென்று நரகம் சொர்க்கமாக மாறிப் போனது பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோன எமன் அங்கே வந்து பார்த்து அதிசயித்தான். ‘தர்ம சாஸ்திர நெறிகள் ஒருவேளை நமக்குத் தெரியாமல் மாற்றப்பட்டு விட்டனவா? அல்லல்பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே?’ என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் ஒன்றும் புரியவில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
வைரத் தேர் பவனி வரும் அற்புத முருகப்பெருமான் திருத்தலம்!
Thiruneetrin Perumai

எனவே, எல்லோரும் சேர்ந்து சர்வேஸ்வரனிடம் போனார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு சிரித்தார் ஈசன். தனது நெற்றியைக் காட்டி, “இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டரமாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.

அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் என்பது விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே, சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர், பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்த்தபோது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், நரகம் சொர்க்கமாக மாறிப்போனது” என்றாராம் சர்வேஸ்வரன்.

பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை? ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப்போனார்கள். ஆகவே, நாளும் பூசுவோம் திருநீறு. போற்றி வணங்குவோம் சிவபெருமானை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com