

பக்தப்பிரஹலாதன் “என் நாராயணன் தூணிலும் இருப்பான் சிறு துரும்பிலும் இருப்பான்” என்று தன் தந்தை இரணியகசிபுவிடம் சொல்ல இதைக் கேட்டு ஆத்திரமடைந்த இரணியகசிபு தனது சிம்மாசனத்தி லிருந்து இறங்கி கதையால் தன் அரண்மைனையில் இருந்த ஒரு தூணை ஓங்கி அடிக்க அந்தத் தூணானது இரண்டாகப் பிளக்க அதிலிருந்து நரசிம்ம ஸ்வாமி ஆக்ரோஷமாய் வெளிப்பட்டார். அது ஒரு வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி சூரியன்அஸ்தமிக்கும் அந்தி மாலைப்பொழுது.
ஆந்திரமாநிலத்தில் நந்தியால் மாவட்டத்தில் நல்லமலா மலைத்தொடரில் அஹோபிலத்தில் வேதமலையில் உயரமான ஒரு இடத்தில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான கல் தூணைப் பிளந்துகொண்டு அதிலிருந்து ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி ஆக்ரோஷமாய் வெளிப்பட்டார். இந்த தூணை “உக்ர ஸ்தம்பம்” என்று அழைக்கிறார்கள்.
கிருதயுகத்தில் இப்பகுதியானது அசுரர்களின் தலைவனான இரண்யகசிபுவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. இங்குதான் ஆயிரம் தூண்களைக் கொண்ட இரணியனின் அரண்மனையும் இருந்துள்ளது. இரணியனின் அரண்மனையில் இருந்த ஆயிரம் தூண்கள் அழிந்துபோக ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி வெளிப்பட்ட இந்த ஒரு தூண் மட்டும் வேத மலையின் உச்சியில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. இந்த தூணானது இரண்டாகப் பிளந்து இரு பிரிவாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.
மகாவிஷ்ணு தன் பக்தனான பிரஹலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த இடம் ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் கோயில் அமைந்துள்ள இடமாகும். இந்த கோயிலுக்கு சற்று முன்னால் ரத்த குண்டம் என்றொரு சிறிய தடாகம் காணப்படுகிறது. இரணியனை வதம் செய்த பின்னர் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி இந்த இடத்தில்தான் தனது திருக்கரங்களைக் கழுவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த சிறிய தடாகத்தில் உள்ள நீரானது சிவப்பு நிறத்தில் உள்ளதைப் பார்க்க முடிகிறது.
ஸ்ரீஜ்வாலா நரசிம்மரை தரிசித்துத் திரும்பும் வழியில் இடது புறத்தில் உக்ர ஸ்தம்பத்தின் தொடக்கப் பாதை தென்படுகிறது. ஒரு பெரிய தாம்புக்கயிற்றைக் கட்டி வைத்துள்ளனர். அதைப் பிடித்துக் கொண்டு மேலேற வேண்டும். இது அவ்வளவு சுலபமல்ல என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிகிறது.
ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் குகைக்கு எதிரே உள்ள ஒரு இடத்தில் தான் உக்ர ஸ்தம்பம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. தொலைவிலிருந்து பார்த்தால் உக்ர ஸ்தம்பத்தின் மலைப்பாறையானது இரண்டாக பிளந்து இரு பிரிவாக நிற்பதைப் பார்க்க முடிகிறது. ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி அவதாரம் செய்த இந்த உக்ர ஸ்தம்பத்தின் உச்சியில் ஜெயக்கொடி பறப்பதை நம்மால் காணமுடிகிறது.
உக்ர ஸ்தம்பத்தின் உச்சியை அடைந்தால் அங்கிருந்து நாம் கருடமலையின் முழுத்தோற்றத்தையும் கருடபகவான் நமக்குத் தரும் காட்சியையும் தரிசித்து அனுபவிக்க முடியும். உச்சியில் உக்ர ஸ்தம்பத்தில் பெருமாளின் பாதம் அமைந்துள்ளது. உக்ர ஸ்தம்பத்தின் உச்சியில் ஏறி நின்று நோக்கினால் அஹோபிலத்தின் முழு பகுதியையும் நம்மால் பார்க்க முடியும். ஆங்காங்கே அருவிகள் விழுவதையும் பார்த்து ரசிக்க முடியும்.
அஹோபிலத்தில் அமைந்துள்ள நவநரசிம்மர் கோயில்கள் தரிசனத்துடன் இந்த உக்ர ஸ்தம்பம் பயணமும் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் உக்ர ஸ்தம்பத்தில் ஏறி உச்சியை அடைவது என்பது மிகவும் கடுமையான பயணமாகும்.