
காஞ்சி என்றதும் நம் மனதில் உடனே வருவது காமாட்சி அம்மன்தான். தமிழ்நாட்டில் வேறு எந்தத் தலத்திலும் இல்லாத சிறப்பாக லட்சுமி தேவியும், சரஸ்வதி தேவியும், பார்வதி தேவியும் ஒரே உருவமாக இங்கு காமாட்சி அம்மனாக வீற்றிருக்கிறார். மகாலட்சுமியும், ஸ்ரீ சரஸ்வதியும்தான் பார்வதி தேவியின் இரு கண்களாக உள்ளனர். அதனால் பௌர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இங்கு வந்து காமாட்சியம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.
சாந்த சொரூபிணியாகக் காட்சியளிக்கும் காமாட்சி தாய் இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக, அதாவது காரணம் (பிலாஹாசம்), பிம்பம் (காமாட்சி), சூட்சுமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருளைப் பெற்றுள்ளனர்.
இந்த மண்டபப் பகுதியிலிருந்து பார்க்கும்பொழுது காமாட்சி தேவிக்கு முன்பு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைப் பார்க்க முடியும். இக்கோயிலின் விசேஷமாக காமாட்சி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும் போதெல்லாம் இந்த ஸ்ரீ சக்கரத்துக்கும் குங்கும அர்ச்சனை நடத்தப்படுகிறது.
ஸ்ரீ ஆதிசங்கரரே ஸ்ரீ சக்கரத்தை இங்கு சிலாரூபமாக பிரதிஷ்டை செய்துள்ளார். அதனால்தான் ஸ்ரீ சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஸ்ரீ வித்யா உபாசன வழிபாடு இத்தலத்தில் நடத்தப்படுகிறது. அதிசக்தி வாய்ந்த 64 கோடி தேவதைகள் இந்த ஸ்ரீ சக்கரத்தை சுற்றி வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீ சக்கரமானது ஒன்பது பிராகாரங்களை அதாவது சுற்றுகளை உடையது.
சக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும், அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள் மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ, வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் காமாட்சியம்மன் கோயிலில் இந்த நவாவரண சுற்றுக்கு ஒவ்வொரு சுற்று வீதமாக பூஜைகள் நடத்தப்பட்டு, 9 சுற்றுகளுக்கும் பூஜை நடக்கும்போது சங்கு தீர்த்தமும் இடம்பெற்றிருக்கும். 9 சுற்றுக்கும் பூஜைகள் முடிந்த பின்புதான் பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்த பூஜை மிகவும் சிறப்பானதாகவும் விசேஷமான பலன்களையும் தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்களால் நடத்தப்படும் இந்த நவாவரண பூஜையின்போது கிடைக்கும் அளவில்லாத பலன்களை ஏழை எளியவர்களும் சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆதிசங்கரர் காமாட்சி தேவியின் முன்பு
ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். மேலும், இந்த ஸ்ரீ சக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஸ்ரீ சக்கரத்தின் 9 சுற்றுகளிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை புனிதமான பௌர்ணமி தினத்தில் கண்டு தரிசனம் செய்தாலே, கோடான கோடி பலன்கள் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். இதைத் தவிர
ஸ்ரீ சக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிப்பதால் இந்த ஸ்ரீ சக்கரத்திலிருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.
ஸ்ரீ சக்கரத்திலிருந்து பெறப்படும் குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் பெற்றால் நாம்தான் பாக்கியசாலிகள். எனவே, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பௌர்ணமி தினத்தன்று நடக்கும் நவாவரண பூஜையை தவறவிடாதீர்கள்.