
சமீப காலமாக ராவணன் பற்றிய செய்திகள், வலைத் தளங்களிலும், வீடியோக்களிலும் அதிகமாக வெளிவருகிறது. ராவணன் பற்றிய பல்வேறு மர்மக் கதைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அதன் உண்மைத் தன்மை எது என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கேட்பதற்கு சுவாரசியமாக உள்ளது.
பிரம்ம தேவரின் வம்சாவளி மரபைக் கொண்ட விஸ்வரசு முனிவருக்கும் அரக்கி கேகேசிக்கும் மகனாகப் பிறந்தவன்தான் பத்து தலை ராவணன். அவன் பிறந்த இடம் உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா அருகில் உள்ள பிஸ்ரக்கில் உள்ளது. இங்கு ராவணனுக்கு கோயிலும் கட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது. விஸ்வரசு முனிவரின் முதல் மனைவி இளவிதைக்கு பிறந்தவர்தான் குபேரன். குபேரன் செல்வத்தின் அதிபதியாக இருந்தார்.
சிறு வயதில் இருந்தே ராவணனுக்கும், அவனது உடன் பிறந்த சகோதரர்களுக்கும், மூத்த குடிமகனான குபேரன் மீது பொறாமையும் வன்மமும் இருந்தது. குபேரன் நீண்ட காலம் பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்து செல்வத்தின் அதிபதி ஆனார். மேலும், பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கும் இலங்கை நாட்டையும், நினைத்த இடத்திற்கு பறந்து செல்லும் புஷ்பக விமானத்தையும் பிரம்ம தேவர் அவனுக்கு பரிசாக வழங்கினார்.
குபேரன் இலங்கையை சிறப்புடன் ஆட்சி செய்தான். இதனால் பொறாமை கொண்ட ராவணன், இலங்கையை ஆட்சி செய்த குபேரனிடம் இருந்து புஷ்பக விமானத்தை பிடுங்கிக் கொண்டு, நாட்டை விட்டே விரட்டி ஆட்சியை கைப்பற்றினான்.
இலங்கையை அபகரித்து ஆட்சி செய்த ராவணன், அவனது தங்கை சூர்பனகையின் பேச்சைக் கேட்டு ஶ்ரீராமரின் மனைவி சீதையை கடத்தி, அசோக வனத்தில் சிறை வைத்தான். சீதையை மீட்க வானர சேனையுடன் படையெடுத்து வந்த ஸ்ரீராமர், ராவணனை பிரம்மாஸ்திரம் ஏவி வதம் செய்தார். அதன் பின்னர் நடந்த விஷயங்கள் மர்மமாக உள்ளது.
இறந்த ராவணன் உடலை, அவனது சகோதரன் விபீஷணனிடம் ஸ்ரீராமர் ஒப்படைத்து, இறுதிச் சடங்குகளை செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால், பதவியேற்கும் ஆர்வத்தில் இருந்த விபீஷணன், ராவணனின் உடலை எரிக்காமல் அப்படியே போட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. எரிக்கப்படாத ராவணனின் உடலை அவனது மெய்க்காப்பாளர்களான நாகவம்சத்தை சேர்ந்த வீரர்கள் பத்திரமாக ஒரு இடத்தில் மறைத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
ராவணனின் மரணம் தற்காலிகமானது என்று நம்பியதால் நாக வம்ச வீரர்கள் ராவணனின் உடலை தங்களுடன் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ராவணனின் இறந்த உடல் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகும் சேதமடையாத வகையில் தைலங்கள் பூசப்பட்டுள்ளது. ராவணனின் உடல் 17 அடி நீள சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சவப்பெட்டியின் கீழ் ராவணனின் விலை மதிப்பற்ற புதையல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புதையல் ஒரு அதிசக்தி வாய்ந்த நாகம் மற்றும் பல ஆபத்தான விலங்குகளால் பாதுகாக்கப்படுகிறது. ராவணன் ஒரு நாள் மீண்டும் உயிர் பெற்று திரும்புவான் என்று நாகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காகவே அவனது உடலை பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் சர்வதேச ராமாயண ஆராய்ச்சி மையம் ராமாயணத்துடன் தொடர்புடைய 50 இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் ஒன்று இலங்கையில் உள்ள ராகலா காடு. அந்தக் காட்டின் நடுவில் ஒரு பெரிய மலை உள்ளது. அங்கு 8,000 அடி உயரத்தில் உள்ள மலைக் குகையில் ராவணனின் உடல் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விலங்குகள் நடமாட்டம் மிக்க ஆபத்தான பகுதியாக இருப்பதால் இங்கு மனித நடமாட்டம் இருப்பதில்லை. இது கதையா அல்லது நிஜமா என்பது மில்லியன் டாலர் கேள்வி?