

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் ஒரத்தூர் அருள்மிகு மரகதவல்லி உடனுறை மார்க்க சகாயேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக நாள் 12.07.2026. சுந்தரருக்கு மார்க்கத்தை காட்டிய ஒரத்தூர் மார்க்க சகாயேசுவரர் சிவன் கோயில்.
பரம்பொருளான இறைவன் ஈடு இணையற்றவன். தன்னை நம்புவோரை அவன் கைவிடுவதில்லை. அவனுக்கு பாமரன் பக்தன் அடியார் என்ற பேதமில்லை. வள்ளலார் திருவருட்பாவில் பாடியதுபோல் எத்துணையும் பேதமுறா எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுபவன்.
தனக்காக பறவை நாச்சியாரிடம் தூது சென்ற இறைவனது செயலால் பெரு மகிழ்வு கொண்ட சுந்தரர், ஆலயம் ஆலயமாக சென்று அவரை வழிபடுவதை தவிர வேறு எதனை செய்தாலும் அது கைமாறாகாது என்பதை உணர்ந்து அவரது ஆலயங்களை போற்றி வழிபடும் விதமாக தலயாத்திரை மேற்கொண்டார்.
சோழ நாட்டு தலங்களை தரிசித்து நடுநாட்டு தலங்கனை தரிசிக்க தொடங்கினார். சிதம்பரம் மற்றும் அதன் கிழக்கு பகுதிஆலயங்களை தரிசித்துவிட்டு மேற்கு புறமாக பயணத்தை தொடங்கினார்.
வெள்ளாற்றின் தென்கரையில் இருந்த திருக்கூடலையாற்றூர் திருத்தலத்திற்கு செல்லும் முடிவுடன் வெள்ளாற்றின் கரை வழியே பயணித்தார். ஒரு கட்டத்தில் வழி தெரியாமல் தவித்தவர் இறைவனிடம் முறையிட்டார். அந்தணர் வடிவத்தில் வந்த இறைவன் குறிப்பிட்ட தூரம் அவரை கூடவே அழைத்துச் சென்று வழியை (மார்க்கத்தைக்) காட்டிவிட்டு பின் மறைந்தார்.
அப்பொழுதுதான் வழிகாட்டியாக வந்தவர் இறைவன் என்பதை சுந்தரர் உணர்ந்தார். "எப்பொழுதும் என்னை கைவிட மாட்டீரோ பெருமானே" என்று உணர்ச்சி பெருக்கில் கூறினார். இறைவன் அவர் போகவேண்டிய மார்க்கத்தை (வழியை) காட்டியதலால் அவருக்கு மார்க்க சகாயேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த புராண வரலாறு நடைபெற்ற இடம் சிதம்பரம் ஆலயத்தின் தல விருட்சமான தில்லை மரங்கள் அடர்ந்த தில்லைவனத்தின் ஒரு பகுதியாகும். ஆலயம் செல்ல வழி கேட்ட ஒருத்தருக்கு ஆண்டவன் வழிகாட்டியதால் அதாவது அந்த ஒருத்தருக்கு அருள் பாலித்ததால் ஒருத்தர் என்பது ஒரத்தூர் என்று மருவி ஊரின் பெயரும் ஒரத்தூர் என்றானது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இவ்வாலயம் சுந்தரரால் வழிபாடு துவங்கப்பட்ட ஆலயமாகும். ஆரம்பத்தில் சிறு கோயிலாக இருந்த இவ்வாலயம் காலப்போக்கில் கற்றளியானது.
இக்கோயிலின் மூலவராக மார்க்கசகாயேசுவரர் உள்ளார். இறைவி மரகதவல்லி ஆவார். இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு இங்கு வளைந்து செல்கிறது. அதுவே இக்கோயிலின் தீர்த்தமாகும்.
அமைப்பு: திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் அமைப்பில் சனீசுவரர் கிழக்கு நோக்கிய நிலையில் சன்னதியின் முன் புறம் உள்ளார்.
கிழக்கு நோக்கி ஆலயம். ஆலயத்தின் எதிரில் திருக்குளம் உள்ளது. மார்க்க சகாயேசுவரர் கிழக்கு நோக்கி லிங்க வடிவத்தில் அருள் பாலிக்கிறார். அவரது இடப்புறமாக தனி சன்னதியில் இருந்தவாறு தென்முகம் நோக்கியவாறு நின்ற கோலத்தில் அருள்பாளிக்கிறார் மரகதாம்பிகை.
சித்தி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுரை சுப்பிரமணியர். கஜலட்சுமி, சண்டிகேசுவரர், நவக்கிரகம், பைரவர, சூரியன் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர். முன் மண்டபத்தில் நடராசர் சன்னதி உள்ளது.
தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில் சிவாலயங்களுக்கே உரித்தான சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிசேகம், மார்கழியில் திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் சிறப்புற நடைபெறுகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஜூலை 12ம் (2026) நாள் இவ்வாலய திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்தத் திருத்தலத்தின் ஆன்மீகப் பின்னணியையும் கும்பாபிஷேக வைபவத்தையும் அறிந்துகொள்வதன் மூலம், நம் வாழ்வில் ஏற்படும் வழி தெரியாத இக்கட்டான சூழல்களில் இறைவனின் வழிகாட்டுதலையும் அருளையும் எப்படிப் பெறுவது என்ற ஆழமான நம்பிக்கையையும் மனஅமைதியையும் நீங்கள் அடைவீர்கள்.