
சிதறு தேங்காய் உடைப்பது என்பது காலம் காலமாக கணபதிக்கு செய்யப்பட்டு வரும் ஒரு பிரபலமான வழிபாட்டு முறையாகும். சகல பாபங்கள், தோஷங்களைப் போக்கவும், நாம் செய்யும் செயல்களில் தடை ஏற்படாமல் இருக்கவும் இந்த சூரை தேங்காய் உடைக்கும் வழிபாட்டை செய்கிறோம். சிதறு தேங்காய் உடைவதைப் போல் நம் மனதில் உள்ள அகங்காரம் எல்லாம் சிதறுகிறது என்று ஆன்மிகவாதிகள் கூறுவர். அதோடு நம் மனதில் உள்ள துன்பங்களும் சிதறிப் போவதாக நம்பப்படுகிறது.
தேங்காயை எப்படி அதன் ஓடு மறைக்கிறதோ, அதுபோல் அறியாமை எனும் மாயையால் ஜீவாத்மா, பரமாத்மாவை உணராமல் நிற்கின்றது. இறைவன் சன்னிதியில் அறியாமை எனும் மாயையை அகற்றி பரமானந்த பேரானந்தத்தை நுகரச் செய்யும் செயல்தான் சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவமாகும்.
சிதறு தேங்காய் உடைக்கும்போது செய்யக் கூடாதவை: ஒன்று, மூன்று என்று ஒற்றைப்படையில்தான் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். இரண்டு நான்கு என்று இரட்டைப் படையில் உடைக்கக் கூடாது. பெண்கள் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் கூட தேங்காய் உடைக்கக் கூடாது.
சிதறு தேங்காய் எண்ணிக்கையும் பலன்களும்: ஒரே ஒரு சிதறு தேங்காய் உடைப்பதால் நினைத்த காரியம் அல்லது செல்லும் காரியம் தடை இல்லாமல் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. தடைகளை தகர்த்தெறிய வழிப் பிள்ளையாருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து விட்டுச் செல்லலாம்.
செய்யும் தொழிலில் உயர்ந்து காட்டவும், நல்ல வேலையில் அமர வேண்டும் என்று நினைப்பவர்களும், நோயால் வாடுபவர்களும், மூன்று தேங்காயை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயாக உடைத்து வழிபட வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க, ஞானம் உண்டாக பிள்ளையாருக்கு ஐந்து சிதறு தேங்காய்களை உடைக்க வேண்டும்.
தீரா கடன் தொல்லைகள் தீர்ந்து மன நிம்மதி கிடைக்க ஏழு சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை வழிபடுங்கள்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெற புதன் கிழமையில் தொடர்ந்து 9 வாரங்கள் 9 சிதறு தேங்காயை உடைத்து பிள்ளையாரை வழி பட்டால் புத்திர பாக்கியம் உண்டாகும்.
அதுபோல், திருமணத்தடை நீங்க 11 சிதறு தேங்காய் உடைத்து, நேரத்திக்கடன் செய்ய, தடைகள் அனைத்தும் விலகும்.