

மதுரை நகரின் தெற்கு மற்றும் மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயில், பூலோக கைலாயம் எனப் போற்றப்படும் ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இத்தலத்தில் சிவபெருமான் (சொக்கநாதர்) மற்றும் பார்வதி (மத்தியபுரி நாயகி) வீற்றிருக்கின்றனர். இப்பிறப்பில் செய்த பாவங்களைப் போக்கி, நன்மை அளிக்கும் தலமாக இது நம்பப்படுகிறது.
மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது மண் (பிருத்வி) தலமாக கருதப்படுகிறது. 12-13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டு, பின்னர் நாயக்கர் காலத்தில் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் மதுரையின் அரசராக பொறுப்பேற்பதற்கு முன், இத்தலத்தில் லிங்க பூஜை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.பத்து இலைகளுடன் கூடிய வித்தியாசமான தசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.
வழக்கமாக எல்லா சிவாலயங்களிலும் சிவலிங்கத்தின் ஆவுடையார் என்ற வாய்ப்பகுதி வலது பக்கத்தில் தான் இருக்கும்.ஆனால் இங்கு மட்டுமே ஆவுடையார் இடது பக்கத்தில் காணப்படுகிறது.காரணம் இங்கே ஆவணி மூலத்தன்று சிவன் மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து வளையல் விற்கும் கோலத்தில் இங்கு வந்து தன்னை தானே பூஜை செய்து கொண்டதாக ஐதீகம்.அன்று சுவாமிக்கும் தனி சன்னதியில் இருக்கும் அம்பாளுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடக்கும்.
இக்கோவிலில் பூஜையின்போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்றுகொண்டு லிங்கத்தை பூஜிப்பார். இங்கு லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.
கோவில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார்.பொதுவாக செம்பில் தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்புடன் காணப்படுகிறது.
மத்தியபுரி நாயகி சன்னிதிக்கு பின்புறம், அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் வீற்றிருந்து அருள்கிறார். உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் மிளகு ரசம் சாதம் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
இங்கு பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.அவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பக சஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விஷேச பூஜை நடக்கும்.அப்போது பைரவருக்கு ஒரு பங்கு அரிசிக்கு மூன்று பங்கு மிளகாய் சேர்த்து செய்த காரமான புளியோதரை செய்து படைக்கின்றனர். இதனால் எதிரி பயம், மனக் குழப்பம் தீரும் என்பது ஐதீகம்.
அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.
புதிய வீடு அல்லது கட்டிடம் கட்டத் தொடங்குபவர்கள், இக்கோயிலில் உள்ள மண்ணை எடுத்துச் சென்று பூமி பூஜை செய்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு. ஆலயத்தில் அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இங்கு நடக்கும் மாசி 10 நாட்கள் திருவிழாவில் 8 ம் நாளில் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கேடய சப்பரத்தில் காலையில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்கள்.
இம்மையிலேயே (இப்பிறவியிலேயே) நன்மைகளைத் தருவதாக பக்தர்களால் பெரிதும் நம்பப்படும். இந்த கோயில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.