
உலகின் மற்ற பகுதிகளில் நாகரிகம் வளர்வதற்கு முன்பே இந்தியாவில் பசு சாணத்தின் மகிமைகளை இந்தியர்கள் அறிந்திருந்தனர். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் விடியற்காலையில் பசுஞ்சாணத்தால் வீட்டையும், முற்றத்தையும் மெழுக வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். விஞ்ஞான ரீதியாக சாணம் சிறந்த கிருமி நாசினியாகும். அதிகாலைப் பொழுதின் காற்றின் குளிர்ச்சியும், இளங்காற்றும் சாணத்தின் மணத்தை அப்பகுதியில் பரவச் செய்து கிருமிகளை அழிக்கிறது.
கோயில் முற்றங்களை சாணத்தால் மெழுகுவதை சரியை மார்க்கத்தின் திருப்பணிகளில் ஒன்றாகக் குறித்துள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள். சிறந்த கிருமி நாசினியான சாணத்திற்கு உலோகங்களிலுள்ள நச்சுத் தன்மையை ஒழிக்கும் ஆற்றலும் உண்டு. எனவேதான், ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தை முதன் முதலில் சாண நீரால் கழுவி நச்சுத் தன்மைகளை அகற்றித் தூய்மைப்படுத்துகின்றனர். பசுஞ்சாணி கிருமி நாசினியாக மட்டுமின்றி, பில்லி, சூன்யம், திருஷ்டி, கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மைக் காக்கும் குணம் உடையது.
நம் வீட்டினையும் சுற்றுப்புறத்தையும் சாணம் கொண்டு மெழுகி, சாண நீர் தெளித்து வருவது நம் பரம்பரை பழக்கம். நம்மை அறியாமல் ஏற்பட்டிருக்கக்கூடிய தீய வினைகள், மனைக்கு அடியில் உள்ள தீய வினைகளின் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே சாணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. வீடுகளில் மட்டுமல்லாமல், ஆலயத்தையும் மந்திரத்தால் தூய்மைப்படுத்துவது போல சாணம் கொண்டும் தூய்மை செய்தனர்.
சாண வறட்டிகளை நெருப்பில் எரிப்பதால் கிடைக்கும் சாம்பலே திருநீறு ஆகும். இதன் மூலம் சாணத்தை விட அதன் சாம்பல் அதிக வீரியமுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். புற்களை மேயும் பசுவின் சாணத்தை நெருப்பில் எரித்துக் கிடைக்கும் திருநீறு பசிதம் என்னும் வகை திருநீறாகும். இதுவே அனைத்திலும் சிறந்தது. சிவனடியார்களுக்கு ஏற்றது.
இதைத் தவிர சாணமும், சாணத்தின் சாம்பலும் செடி, கொடி, மரங்களுக்கு நல்ல உரமாகவும் பயன்படுகிறது. பூச்செடிகளுக்கு சாணத்தை உரமாக இடுவதால் அச்செடி சிறந்த பூக்களை பூக்கின்றன என்பது விஞ்ஞான ரீதியாக உண்மையாகும். கோயில்கள் மட்டுமின்றி, வீடுகளிலும் விசேஷ நாட்களில் சாணம் மெழுகி சுண்ணாம்பு பூசி, செம்மண் பட்டைகளை வரைந்து அலங்கரிப்பது வழக்கம்.
இப்படிச் செய்வதால் மும்மூர்த்திகளான பிரம்மனும், திருமாலும், ருத்திரனும் அங்கு எழுந்தருள்வார்கள் என்பது ஐதீகம். வெண்மை பிரம்மனின் அம்சமாகவும், பசுமை மகாவிஷ்ணுவின் அம்சமாகவும், செம்மை சிவனின் அம்சமாகவும் விளங்குகின்றன. பூஜைகளின்போது சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து சந்தனம், குங்குமம் வைத்து விநாயகப் பெருமானாக ஆவாகனம் செய்து வழிபடுவது நம் வழக்கம் என்பதை நாம் அறிவோம்.
மார்கழி மாதத்தில் வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து, கோலமிட்டு அதன் நடுவில் சாணத்தைப் பிடித்து வைத்து, அதன் உச்சியில் பூசணிப் பூக்களைச் சூட்டி வைப்பர். பூக்களுக்கு பதிலாக அருகம்புல்லையும் சாணத்தின் மீது செருகி வைப்பதுண்டு. விநாயகப் பெருமானாக வீற்றிருக்கும் சாணம் விக்னங்களை நீக்கி, அனைத்து நற்காரியங்களையும் குறைவற நிறைவேற்றித்தருவார். பிள்ளையாராகப் பிடித்து வைக்கும் சாணம் நெடுநாள் கெடாது. இதை பூச்சிகள் அரிப்பதில்லை. வண்டுகள் துளைப்பதில்லை. தங்கத்தைத் தூய்மைப்படுத்த, அதனை புடம் போடும் பக்குவத்திலும் சாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது.