

ராகு- கேதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணத் தடையை தரும். குழந்தை செல்வம் கிடைப்பது தாமதமாகும். பல இடையூறுகளையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். விஷ பயமும், மனதில் அச்சமும் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவ்விதமான கிரக நிலைகளில் இருந்தாலும், ராகு தசை, கேது தசை அதன் புத்திகள் நடைபெற்றாலும், கோச்சார நிலையில் ராகு- கேதுவால் பாதிக்கப்பட்டாலும் தினம் காலையில் அருகில் உள்ள திருக்கோவிலுக்குச் சென்று ராகு- கேதுவிற்குரிய பாடல்களை பாராயணம் செய்து வருதல் வேண்டும. ஏழை எளியவர்களுக்கு, கூலி வேலை செய்பவர்கள், வண்டி இழுப்பவர்கள், இவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு வாரம் ஒருமுறை உணவு தானமாக கொடுக்கவேண்டும். உடைகளை ஏழைகளுக்கு தானமாக வாங்கிக் கொடுத்து உதவவேண்டும்..இவைகளே சிறந்த பரிகாரம் ஆகும்.
வசதி படைத்தோர் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப திருத்தலங்களை தேர்வு செய்து அங்கு சென்று பிரார்த்தனை செய்து வருவதால் ராகு -கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம்.
ராகு, கேது பரிகாரத்தலங்கள்:
திருநாகேஸ்வரம்:
ராகு பகவானால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை செல்வம் கிடைக்க தாமதம் இவைகளைப் போக்க இங்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் பூஜை செய்வது சிறப்பானது ஆகும். அருள்தரும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது ராகு பகவானின் திருமேனியில் விழும் பால் சற்று நீல நிறமாக மாறி பின் கீழே விழும்போது வெள்ளையாக மாறிவிடுவது சிறப்பு.
திரு காளகஸ்த்தி:
இங்கு தோஷம் உடையவர்கள் பரிகாரம் செய்யும் பொழுது அதற்குரிய ஸ்லோகங்களை அவர்களையே சொல்லும்படி செய்கிறார்கள்.அது தாங்களே தோஷ பரிகாரம் செய்வதற்கு ஒப்பானதாக இந்த வழிபாடு சிறந்து விளங்குகிறது.
திருவேற்காடு திருக்கோயில்:
அங்கு சென்று அருள்மிகு கருமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து அங்குள்ள புற்றுக்கு பால்வார்த்து வணங்கி வருவதால் ராகுவால் ஏற்பட்ட தோஷம் நீங்குகிறது.
சமயபுரம் மாரியம்மன்:
இங்கு சென்று அருள்மிகு மாரியம்மனை வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் ராகுவால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
பெரியபாளையத்தம்மன் திருக்கோயில் :
இங்கு வேப்பிலை ஆடை அணிந்து வலம் வந்து பிரார்த்தனை செய்து வந்தால் ராகு தோஷம் நீங்கும்.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள மாரியம்மன் அல்லது காளி கோயிலுக்குச் சென்று ராகு கால வேளையில், செவ்வாய், வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை விளக்கேற்றி அம்மனுக்குரிய பாடல்களை பாடி மனதார பிரார்த்தனை செய்து வருவதால் ராகுவால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில்:
சதுர்த்தியில் விரதம் இருந்து மனதார பிரார்த்தனை செய்து ஏழை எளியோர்க்கு அன்னதானம் செய்து வருவதால் கேது பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்குகிறது.
அரசு வேம்பு வழிபாடு:
இம்மரங்களை வழிபடுவது பிரம்மா, விஷ்ணு ,சிவன் மூவரையும் வழிபடுவதாகும். உணவு தானமாகக் கொடுத்தல், ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுதல் ,கன்னியருக்கு திருமணம் நடைபெற உதவுதல் போன்றவற்றின் மூலம் தோஷங்கள் நீங்கி முழுமையான பலனைப் பெறலாம்.
பிரதோஷ வழிபாடு:
ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியன்று சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது .பிரதோஷ வேளையில் மாலை 4:30 ல் இருந்து ஆறு மணிக்குள் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் ராகு கேதுவால் ஏற்படும் தோஷத்தை நீக்க உதவும்.
வேந்தன்பட்டி நெய் நந்தி திருத்தலம்:
பிரதோஷ காலத்தில் இங்குள்ள அருள்நந்தி நெய் நந்தீஸ்வரரை மனமார பிரார்த்தனை செய்து வந்தால் ராகு- கேதுவால் ஏற்பட்ட தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். சிவனுக்கு வில்வம், பசுவிற்கு புல், அன்னதானம், மற்றவர்களுக்கு ஆறுதல் மொழி இவைகள் இங்கு சிறப்பு பிரார்த்தனை.
ராமேஸ்வரம்:
இங்கு கடலில் தீர்த்தமாடிய பின் திருக்கோவிலைச் சுற்றி உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ,சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து, தான தர்மங்கள் செய்து வருவதால் பல தோஷங்கள் நீங்கி உடல் நலமும், குழந்தைச் செல்வங்களும் பெறலாம்.