

இந்திரனின் சபையில் தேவலோகப் பேரழகியான ரம்பை, தனது மனதில் பொறாமைக்கு இடம் அளித்ததால் இழந்த தனது அழகை மீண்டும் பெற பார்வதி தேவியை (காத்யாயினி), மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாகச் (பொம்மையாக) செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள். ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த அன்னையின் தரிசனத்தால் ரம்பா தான் முன்பு இருந்ததைக் காட்டிலும் பேரழகும், வசீகரத்தையும் கொண்டவளாக மாறினாள். அவளுக்குப் பெரும் செல்வம் கிடைத்தது.
அம்பிகை மனம் மகிழ்ந்து, நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியை’ (Rambha Tritiya)என்று பெண்கள் கொண்டாடும் திருவிழாவாக ஆகட்டும் என்றும் ஆசீர்வதித்தாள். அதன்படி ஆண்டுதோறும் இரண்டு தினங்கள் ரம்பா திருதியையாகக் கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வடக்கே இந்த விரதம் Rambha Teej என்றும், தெற்கே ரம்பா திருதியை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தாண்டு (2026) ரம்பா திருதியை வைகாசி மாத சுக்ல பட்ச திருதியை திதியான ஜூன் 17-ம் தேதியன்று புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
இது பொதுவாக வைகாசி மாத வளர்பிறை திருதியை திதியில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத வளர்பிறை திருதியையும் ரம்பா திருதியை என்று சிறப்பித்துக் கூறுவதுண்டு. ரம்பா திருதியை திதி அன்றைய தினம் ஜூன் 16-ந்தேதி இரவு 12.52 (AM) மணிக்கு தொடங்கி ஜூன் 17-ம்தேதி புதன் கிழமை இரவு 9.39(PM) மணி வரை நீடிக்கிறது.
அந்த வகையில் ரம்பா திருதியை என்பது வைகாசி (மே - ஜூன்) மாத வளர்பிறை திருதியை நாளில் பெண்கள் அழகையும், செல்வச் செழிப்பையும், திருமண பாக்கியத்தையும் வேண்டி, வாழை மரங்களை வைத்து அம்பாளை வழிபடும் சிறப்பு விரத நாளாக கருதப்படுகிறது.
ரம்பா திருதியை தினத்தன்று காலையில் குளித்து, சுத்தமான உடைகளை அணிந்து, காத்யாயனி தேவி அல்லது பார்வதி தேவியின் படத்தை வைத்து வழிபட வேண்டும்.
அதாவது பொதுவாக ரம்பா திருதியை அன்று கௌரி தேவி அல்லது அம்மன் சன்னதியில், மஞ்சள் நிறப் பொருட்களைப் படைத்து, வாழைக்கன்றுகளால் அலங்கரித்து, பழுத்த பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம்.
ரம்பா திருதியை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம், நீண்ட ஆயுள், கணவன்-மனைவி நல்லிணக்கம், திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம், குடும்ப முன்னேற்றம் மற்றும் தடைகள் நீங்கும், ஆரோக்கியம் பெருகும் என நம்பப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு ஏற்ற நல்ல கணவர் அமைய வேண்டி இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
இந்த நாளில் மங்களகரமான மஞ்சள், குங்குமம், வளையல்கள் மற்றும் பழ வகைகளைத் தானம் செய்வது சிறந்தது.
ஜாதகத்தில் சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக நீண்ட நாட்களாக திருமண தடைப்படும் பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நிச்சயம். இது 'அட்சய திருதியை'க்கு இணையான சுப தினமாகக் கருதப்படுகிறது.
எனவே அட்சய திருதியை போன்றே மங்களகரமான இந்த நாளில் சிறிதளவு தங்கம் வாங்கினால் வற்றாத செல்வம் கிடைக்கும்.
இந்த நாளில் வாங்கும் ஆபரணங்கள், உலோகங்கள், தானியங்கள் அனைத்தும் பன்மடங்கு சேரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக இந்த நாளில் அம்பாளை மனமுருகி வழிபடும் பெண்களுக்கு முக வசீகரமும், அழகும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும், நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் கைக்கூடும். எனவே முடிந்தவர்கள் இந்த நாளில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அல்லது நாணயங்களை வாங்கி வீட்டில் சுவாமி படம் அல்லது பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பெரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ரம்பா திருதியை திதியான ஜூன் 17-ந்தேதி காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரையிலும், மாலை 4.45 மணி முதல் 6.45 மணி வரையிலும் தங்க வாங்க சிறந்த நேரமாகும். எனவே இந்த நேரத்தை தவறவிடாமல் உங்களால் முடிந்த அளவு தங்கம் அல்லது வெள்ளி வாங்குங்கள்.