சமூகத்தில் புகழ், மதிப்பை பெருக்கும் கந்த சஷ்டி கவச பாராயணம்!

Sri Murugaperuman
Sri Murugaperuman
Updated on

முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற திருநாமமும் உண்டு. அந்த ஆறு முகங்களும் ஆறு விதமான தொழில்களைப் புரிந்து பக்தர்களை பல்வேறு இடர்களிலிருந்து காக்கிறது. ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் மற்றும் அதோமுகம் ஆகியவையே முருகனின் ஆறு முகங்கள் ஆகும். ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட சக்தியை குறிக்கிறது. மேலும், அவை அனைத்தும் சேர்ந்தது முருகனின் முழுமையான வடிவமாகும். இது ஞானம், சக்தி, கருணை, துணிவு போன்ற பல்வேறு பண்புகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்.

ஈசானம் படைப்பின் முகமாகும், தத்புருஷம் காத்தலின் முகமாகும், வாமதேவம் என்பது அழிவின் முகமாகும், அகோரம் இருளின் முகமாகும், சத்யோஜாதம் என்பது ஆன்மா மற்றும் அறிவின் முகமாகும், அதோமுகம் என்பது கருணையின் முகமாகும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து ஆறுமுகப்பெருமானின் ஒட்டுமொத்த வடிவத்தை உருவாக்குகின்றன. இவை அனைத்தும் அஞ்ஞான இருளை அகற்றி, ஆன்மாக்களுக்கு ஞானத்தையும், அருளையும் அளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அவசியம் அறிய வேண்டிய 6 முக்கிய விரதங்கள்!
Sri Murugaperuman

முருகனின் 36 அட்சரங்கள்: பால தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம் முருகனின் அருளையும், வேலின் ஆற்றலையும் போற்றிப் பாடப்படுகிறது. முருகனின் 36 அட்சரங்கள் என்பது 'கந்த சஷ்டி கவசம்' பாடலை தினமும் 36 முறை சொல்வதைக் குறிக்கிறது. இது ஒரு மந்திரமாகவோ அல்லது மந்திரங்கள் அடங்கிய ஒரு பாடலாகவோ கருதப்படவில்லை. மாறாக. இந்தப் பாடலை 36 முறை சொல்வதன் மூலம் முருகனின் அருளைப் பெறுவதே இதன் நோக்கமாகும்.

கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால் புகழ், மதிப்பு கூடும். நேர்மறை ஆற்றல் பெருகும். கஷ்டங்கள், சோதனைகள் நீங்கும். தினமும் இதனை காலையிலும், மாலையிலும் படிப்பதால் முருகனின் அருளைப் பெற்று, தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறப் பெறலாம்.

முருகனின் பிற தூய தமிழ் பெயர்கள்:

ஆறு முகங்களைக் கொண்டதால் முருகனுக்கு ஆறுமுகன் என்ற பெயர். என்றும் இளமையானவர் என்பதைக் குறிக்க முருகனுக்கு குமரன் என்று பெயர். முருகன் அல்லது முருகு என்றால் அழகு என்று பொருள். சுப்பிரமணியன் என்பதற்கு வெளிப்படையானவர் எனப் பொருள். செந்தில் என்றால் வெற்றி எனப் பொருள். எதிலும் வெற்றி பெறுபவர் என்பதையே இது குறிக்கிறது. சரவணன் என்பதற்கு முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் பிறந்தவர் என்பதால் இப்பெயர்.

இதையும் படியுங்கள்:
பர்வதவர்த்தினி தாயார் பிறந்த வீடு: கந்தமாதன பர்வதத்தின் புராண வரலாறு!
Sri Murugaperuman

ஆறு திருமுகங்களைக் கொண்டவர் என்பதால் முருகப்பெருமானுக்கு சண்முகன் என்பது திருநாமம். தண்டத்தை கையில் ஏந்தியவர் என்பதால் முருகப்பெருமானுக்கு தண்டபாணி என்பது திருநாமம். கடவுள்களை எல்லாம் ஆட்சி செய்பவர் என்பதால் முருகப்பெருமான் சுவாமிநாதன் என அழைக்கப்படுகிறார். மலைகளின் குகைகளில் வாசம் செய்பவர் என்பதால் முருகப்பெருமானுக்கு குகன் என்பது திருநாமம்.

தாமரை கந்தகத்திலிருந்து அவதரித்தவர் என்பதால் முருகன் கந்தன் என அழைக்கப்படுகிறான். கங்கையால் தாங்கி வளர்க்கப்பட்டவர் என்பதால் முருகப்பெருமான் காங்கேயன் என்றும் அழைக்கப்படுகிறார். திருக்கரத்தில் வேல் தாங்கி பக்தர்களைக் காப்பதால் முருகப்பெருமானுக்கு வேலவன் என்றும் திருநாமமுண்டு. கார்த்திகைப் பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்டால் முருகனுக்கு கார்த்திகேயன் என்றொரு பெயருமுண்டு. சிவசக்தி குமரனான முருகப்பெருமான் இப்படி ஏராளமான தமிழ் பெயர்கள் கொண்டு பக்தர்களால் பக்தியோடு அழைக்கப்படுகிறான்.

logo
Kalki Online
kalkionline.com