கோயில் படிகள் உணர்த்தும் உண்மைகள்!

Sabarimala Ayyappa Temple 18 steps
Sabarimala Ayyappa Temple - 18 steps
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

சபரிமலை ஸ்ரீஐயப்பன் சன்னிதானத்திற்கு முன்னிருக்கும் 'பதினெட்டுப் படிகள்' மிகவும் புகழ் பெற்றவை, மிகவும் புனிதமானவை. கடுமையான விரதமிருந்து இருமுடி கட்டியவர்கள் மட்டும் இந்தத் திருப்படிகளில் ஏறிக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

இங்கு பதினெட்டுத் தேவதைகள் பதினெட்டுப் படிகளாக இருக்கிறார்கள். படிகளைக் கடந்து செல்லும் உண்மையான விரத ஐயப்ப சாமிகளின் பாவங்களை அந்தத் தேவதைகள் நீக்குகின்றனர் எனும் தொன்ம நம்பிக்கை இருக்கிறது. 

'பதினெட்டாம் படியான்' என்ற ஒரு திருப்பெயர், சிறப்பாக ஸ்ரீ ஐயப்பனையும், பொதுவாக, கருப்பண்ணசாமி முதலிய காவல் தெய்வங்களையும் குறிப்பிடுகிறது. பதினெட்டாம்படியின் மாண்புகளை அறிவதற்கு இப்பெயர் ஒரு சிறந்த சான்றாக விளங்குவதைக் காணலாம்.

உண்மையில், பதினெட்டுப் படிகளுக்கும், பதினெட்டாம் படிக்கும் தனி மகிமைகள் இருக்கின்றன. அவை சில தத்துவ உட்பொருள்களையும் மறைவாக உணர்த்துகின்றன. 

பதினெட்டுப் படிகள் என்பவை வருமாறு: 

1. பூதங்கள் 5 

2. பொறிகள் 5 

3. புலன்கள் 5 

4. மலங்கள் 3 

ஆக 18 படிகள். அதாவது, பூதங்கள் 5, பொறிகள் 5, புலன்கள் 5 ஆகிய பதினைந்து ஆன்ம தத்துவங்களின் துணையோடு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் கடப்பது பக்தி சாதனத்தில் ஒரு நிலையாகும். பதினெட்டுப் படிகளும், பதினெட்டாம் படியும் இந்த நிலையை உணர்த்துகின்றன. 

மனிதர்களிடம் இருக்கும் தீய குணங்கள் காமம், குரோதம், மதம், கோபம் முதலியன பலவாகும். பதினெட்டுப் படிகளில் ஒவ்வொரு படியைக் கடக்கும் போதும், ஒவ்வொரு தீய குணத்தை ஒழிக்க வேண்டும். தீய குணங்களை ஒழித்தபடியே இறைவனை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.

சில தலங்களில் பதினெட்டாம் படியைத் தவிர, வேறு படியைப் புனிதப் படியாகப் போற்றுகிறார்கள். 

திருச்செங்கோட்டில் அறுபதாம் படி ‘சத்தியப்படி' ஆகும். ஏதேனும் ஒரு வழக்கில் ஒருவர் அறுபதாம் படியின் மீது நின்று, முருகன் பெயரால் சத்தியம் செய்தால், மக்கள் அதை முழு மனதுடன் ஏற்று வழக்கை முடிக்கிறார்கள். 

இறைவனை அடைவதற்குத் தத்துவங்கள் திருப்படிகளாகும். ஆகவே, திருக்கோயில் படிகள் அனைத்தும் தத்துவங்களே. 

படிகளின் தத்துவ உட்பொருட்களை முதன் முதல் விளக்கியவர் திருமூலர். 

"முப்பத்தாறு தத்துவங்களை முக்தியை அடைவதற்குரிய ஏணிப் படிகளாகப் பயன்படுத்த வேண்டும். அவற்றைக் கடந்து முன்னேறிச் சென்று முடிவில் சிவபெருமானைத் தரிசித்து, தெளிந்து, சிவமேயாய்ச் செயலற்றிருக்க வேண்டும்" என்று திருமூலர் குறிப்பிடுகிறார் (திருமந்திரம் 126). 

திருவண்ணாமலையில் மூலவரைத் தரிசிக்க முப்பத்தாறு படிகளைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த முப்பத்தாறு படிகள் என்பன ஆன்ம தத்துவம் 24; வித்யா தத்துவம் 7; சிவ தத்துவம் 5; என்ற முப்பத்தாறு தத்துவங்களே. 

இவ்வாறு பக்திப் படிகளால் தெரியும் உண்மைகள் பல இருக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஐயப்பன் சிலையை யார் செய்ய வேண்டும்? சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது தெரியுமா?
Sabarimala Ayyappa Temple 18 steps

ஆகவே, கோயில்களில் காணப்படும் திருப்படிகள் சாதாரணப் படிகள் அல்ல. பலவகைப்பட்ட உட்பொருள்களுடன் அவை திகழ்கின்றன. படிகள் தெய்வாம்சங்கள் நிறைந்தவை. வழிபாட்டுக்குரியவை.

பதினெட்டுப் படிகளைத் தொடர்ந்து, ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கையும் கடப்பது ஓர் உயர்ந்த நிலை. முப்பத்தாறு தத்துவங்களைக் கடப்பது அதற்கும் மேலான நிலை. தொண்ணூற்றாறு தத்துவங்களைக் கடப்பது மிக மிக உச்சநிலை; முக்தி நிலை; வீடுபேறு. 

இவ்வுலக வாழ்க்கை பயனுடையதாக அமைய, படிப்படியாக உயர்வைப் பெற்றிட இந்தப் படிகள் நமக்கு உதவுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com